ஜெய்ப்பூர்: 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியின் போது ராஜஸ்தான் வீரர் ஷிம்ரோன் ஹெட்மேயர் மற்றும் பெங்களூர் அணி வீரர் பிலிப் சால்ட் ஆகியோர் பேட்டிங் செய்ய வந்த போது அம்பயர் போட்டியை சிறிது நேரம் நிறுத்தி அவர்களை சோதனை செய்தார்.
அதனால் போட்டியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது. எதற்காக அம்பயர் இவ்வாறு செய்தார்? அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? என ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் விதிகளின்படி பேட் எத்தனை அளவில் இருக்க வேண்டும் என்பதற்கு தனிப்பட்ட விதி உள்ளது. அதை அளக்கும் கருவியும் உள்ளது.

அம்பயருக்கு சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அவர் போட்டியில் எந்த நேரத்திலும் ஒரு பேட்ஸ்மேனின் பேட்டை அந்த கருவியை வைத்து அளந்து பார்க்கலாம். அந்த அளவுக்கு மாறாக பேட் இருந்தால் சர்வதேச போட்டிகள் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களின் விதிப்படி என்ன தண்டனை அளிக்க வேண்டும் என விதிமுறை இருக்கிறதோ அதன்படி தண்டனை அளிக்கப்படும்.
ஐபிஎல் -இல் பொதுவாக இதற்கு தண்டனை என தனியாக எதுவும் விதிக்கப்படவில்லை. எனினும், கள நடுவர் ஷிம்ரோன் ஹெட்மேயர் மற்றும் பிலிப் சால்ட் பேட்டை வாங்கி அளந்து பார்த்தார். அவர்களின் பேட் அந்த கருவிக்குள் நுழைந்து சென்றது. இதை அடுத்து அம்பயர் அவர்களை தொடர்ந்து பேட்டிங் செய்ய அனுமதித்தார்.
சமீபத்தில் இங்கிலாந்து உள்நாட்டு கவுன்டி டெஸ்ட் தொடரில் இதுபோன்ற சோதனை நடத்தப்பட்ட போது எசக்ஸ் வீரர் பெரோஸ் குஷியின் பேட் அளவுக்கு மாறாக இருந்தது. அந்த தொடரின் விதிப்படி அந்த அணிக்கு 12 புள்ளிகள் குறைக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டம் விளையாடி 47 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். ரியான் பராக் 22 பந்துகளில் 30 ரன்கள், துருவ் ஜூரல் 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தனர். அடுத்து ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 17.3 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.