மும்பை: நடப்பு ஐபிஎல் தொடருடன் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து விலகுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சஞ்சு சாம்சன் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடையிலான மோதல் ஒருபக்கம், ரியான் பராக்கிற்கு இருக்கும் நிர்வாகிகள் ஆதரவு உள்ளிட்ட காரணங்களால், ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் விலக முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக ராஜஸ்தான் அணி எழுச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதற்கு ராஜஸ்தான் அணிக்குள் நிலவும் மோசமான சூழலே காரணம் என்று பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக இந்த சீசனில் முழுமையாக விளையாடவில்லை. முதல் 3 போட்டிகளில் விரலில் ஏற்பட்ட காயத்தால் இம்பேக்ட் பிளேயராக மட்டுமே ஆடினார். தற்போது இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மொத்தமாகவே விலகி இருக்கிறார். இதனால் பொறுப்பு கேப்டனாக ரியான் பராக் செயல்பட்டு வருகிறார்.
சீனியர் வீரரான ஜெய்ஸ்வால் இருக்கும் போது, ரியான் பராக்கிற்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டது பேசு பொருளாகி இருக்கிறது. இதற்கு ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ரஞ்சித் பர்தாகூர் தான். ரியான் பராக்கின் உறவினரான ரஞ்சித் பர்தாகூர், அவருக்கு கேப்டன்சியை பெற்று கொடுத்துள்ளார். அதேபோல் சஞ்சு சாம்சனுக்கு நிர்வாகிகள் மத்தியில் இருந்த ஆதரவு குறைந்திருக்கிறது.
இன்னொரு பக்கம் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் சஞ்சு சாம்சன் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. ரீடென்ஷனின் போதே ராகுல் டிராவிட் - சஞ்சு சாம்சன் இடையில் கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது. இதன்பின் ஐபிஎல் தொடரில் ராகுல் டிராவிட் கொஞ்சம் கூட சஞ்சு சாம்சனின் கருத்துகளை கேட்காமல் முடிவுகளை எடுத்துள்ளார். இதனால் டிராவிட்டின் ஆலோசனையில் கூட சஞ்சு சாம்சன் பங்கேற்கவில்லை.
இதனால் அடுத்த சீசனுக்கு முன்பாக சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் இருந்து விலக முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் ராஜஸ்தான் அணிக்காக நீண்ட ஆண்டுகளாக சஞ்சு சாம்சன் விளையாடி வருகிறார். நிர்வாகிகளுடன் மோதல் ஏற்பட்டாலும், சஞ்சு சாம்சன் அனைவரையும் அரவணைத்து செல்பவர்தான்.
தற்போதைய சூழலில் மினி ஏலத்திற்கு சஞ்சு சாம்சன் வந்தாலும், அவரை பெரிய தொகை கொடுத்து வாங்க ஏராளமான அணிகள் முயற்சிப்பார்கள். ஆனால் எந்த அணியும் கேப்டன் பதவி கொடுப்பார்களா என்பது கேள்வி தான். இதனால் அடுத்த சீசனுக்குள் அணியில் இருக்கும் சிக்கல்களை விரைவாக முடித்து, அடுத்த சீசனுக்கு அணியை தயார் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.