பெங்களூர்: 2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே அம்பயரின் தீர்ப்பு குறித்த சர்ச்சை வெடித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய ஆட்டத்தில், அதிரடி வீரர் ஹென்ரிச் க்ளாசென் அவுட் ஆன விதம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நடந்தது என்ன?
இந்தப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 135 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடிக்கொண்டிருந்தபோது, 14-வது ஓவரை வீச ரொமாரியோ ஷெப்பர்ட் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே க்ளாசென் ஒரு பெரிய ஷாட் ஆட முயன்றார். பந்து உயரே எழும்பி டீப் மிட்விக்கெட்டில் நின்றிருந்த பில் சால்ட் கைகளில் தஞ்சம் புகுந்தது. ஆனால், கேட்ச் பிடிக்கும்போது பில் சால்ட்டின் கால் எல்லைக் கோட்டிற்கு மிக அருகில் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த கள அம்பயர்கள், மூன்றாவது அம்பயரிடம் முறையிட்டனர்.

மூன்றாவது அம்பயர் பல்வேறு கோணங்களில் அந்த கேட்ச்சை ஆய்வு செய்தார். பில் சால்ட்டின் கால் எல்லைக் கோட்டைத் தொட்டதா அல்லது அந்த குஷன் நகர்ந்ததா என்று நீண்ட நேரம் சோதனை செய்யப்பட்டது. இறுதியில், கால் எல்லைக் கோட்டைத் தொடவில்லை என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லாததால், மூன்றாவது அம்பயர் 'அவுட்' என்று தீர்ப்பு வழங்கினார். 22 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்த க்ளாசென், இந்தத் தீர்ப்பைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.
அம்பயரின் தீர்ப்பு வந்த பிறகும் க்ளாசென் மைதானத்தை விட்டு வெளியேறவில்லை. எல்லைக் கோட்டிற்கு அருகே நின்றிருந்த அவர், அங்கிருந்த நான்காவது அம்பயரிடம் இது குறித்து நீண்ட நேரம் விவாதித்தார். பில் சால்ட்டின் கால் எல்லைக் கோட்டைத் தொட்டதாக அவர் வாதிட்டது போலத் தெரிந்தது. மிகவும் அதிருப்தியுடன் காணப்பட்ட க்ளாசென், மைதானத்தை விட்டு வெளியேறும்போது தனது தலையை அசைத்தபடி அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

பெரிய அளவில் எதிர்க்கவில்லை என்றாலும், தொழில்நுட்பம் வழங்கிய தீர்ப்பை அவரால் மனதார ஏற்க முடியவில்லை என்பது அவரது உடல் மொழியில் தெரிந்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சிறப்பாக முன்னேறிக் கொண்டிருந்த நேரத்தில் க்ளாசென் விக்கெட் விழுந்தது அந்த அணிக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது. இது 2026 ஐபிஎல் தொடரின் முதல் பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பெங்களூரு அணி 15.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி படுதோல்வி அடைந்தது.