விராட் பாயை சீக்கிரம் அவுட் செய்யலனா கஷ்டம்.. தோல்வி குறித்து ஓப்பனாக பேசிய இஷான் கிஷன்!
பெங்களூர்: 2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் அணியின் இடைக்கால கேப்டனாகப் பொறுப்பேற்ற இஷான் கிஷன், தனது முதல் போட்டியிலேயே தோல்வியைத் தழுவினாலும், ஆட்டம் முடிந்த பின் தோல்விக்கான காரணங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 15.4 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 38 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார்.

இந்த தோல்வி குறித்துப் பேசிய இஷான் கிஷன், "தொடக்கத்தில் 3-4 ஓவர்களுக்குப் பிறகு ஆடுகளம் பேட்டிங்கிற்கு நன்றாகவே இருந்தது. ஆனால் நாங்கள் ஆரம்பத்திலேயே சில முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். அடுத்த முறை இதனைச் சரியாகக் கவனிப்போம். இரண்டாவது இன்னிங்ஸில் பந்து பேட்டிற்கு நன்றாக வந்ததால் பேட்டிங் செய்வது இன்னும் எளிதாக இருந்தது. எனவே, நாங்கள் பேட்டிங் செய்யும் போது ஷாட் தேர்வுகளில் (Shot Selection) இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டிருக்க வேண்டும்" என்றார்.
ஐதராபாத் அணி 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த போதும், இஷான் கிஷனின் 80 ரன்களும், அனிக்கேட் வர்மாவின் 43 ரன்களும் அந்த அணி 201 ரன்கள் எடுக்க உதவியது. இது குறித்துப் பேசிய அவர், "தடம் மாறிய பிறகும் நாங்கள் மீண்டு வந்து 200 ரன்களைக் கடந்தது அணிக்கு நல்ல தன்னம்பிக்கையை அளிக்கிறது. அதே சமயம் பெங்களூரு அணியின் பேட்டிங்கையும் பாராட்ட வேண்டும்" என்றார்.
குறிப்பாக விராட் கோலி குறித்துப் பேசிய இஷான் கிஷன், "விராட் பாயை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவுட் செய்ய வேண்டும். இல்லையென்றால், அவர் ஒருமுறை நிலைத்து நின்று விளையாடத் தொடங்கிவிட்டால் அவரைத் தடுப்பது மிகவும் கடினம்" என்று 69 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த கோலியைப் புகழ்ந்தார்.
பந்துவீச்சில் ஐதராபாத் அணி 15.4 ஓவர்களிலேயே 203 ரன்களை விட்டுக்கொடுத்தது. "பந்துவீச்சில் நாங்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். சில இடங்களில் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தவில்லை. இது தொடரின் முதல் போட்டி என்பதால் இத்தகைய தவறுகள் நடப்பது இயல்புதான். அடுத்த போட்டியில் இன்னும் கவனத்துடனும், வலிமையாகவும் திரும்புவோம். கேப்டனாக இந்தப் போட்டியின் ஒவ்வொரு நொடியையும் ரசித்துச் செய்தேன். ஒரு அணியாக நாங்கள் நிச்சயம் முன்னேறுவோம்" என்று இஷான் கிஷன் நம்பிக்கையுடன் பேசினார்.


Click it and Unblock the Notifications