பெங்களூர்: 2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், ஆர்சிபி அணி வீரர்கள் அனைவரும் தங்கள் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுவது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்குப் பின்னால் ஒரு சோகமான வரலாற்றுப் பின்னணி இருக்கிறது.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், 18 ஆண்டுகாலக் காத்திருப்புக்குப் பிறகு ஆர்சிபி அணி தனது முதல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பிரம்மாண்டமான வெற்றிக் கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மைதானத்தின் நுழைவு வாயில் அருகே ஏற்பட்ட பயங்கரக் கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்தச் சோகமான சம்பவத்தில் உயிரிழந்த அந்த 11 ரசிகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே, இந்த சீசனின் முதல் போட்டியில் ஆர்சிபி வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுகின்றனர். அதுமட்டுமின்றி, போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சியின் போது ஆர்சிபி வீரர்கள் அனைவரும் 11 என்ற எண் கொண்ட ஜெர்சியை அணிந்து பயிற்சியில் ஈடுபட்டனர். மேலும், மைதானத்தில் அந்த 11 ரசிகர்களின் நினைவாக 11 இருக்கைகள் காலியாக வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுப் பலகை ஒன்றும் மைதானத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக கடந்த ஒரு ஆண்டாக சின்னசாமி மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மகளிர் உலகக் கோப்பை மற்றும் ஆடவர் டி20 உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெங்களூரு இழந்தது. தற்போது மைதானத்தில் பல்வேறு பாதுகாப்பு மாற்றங்கள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்குப் பிறகே ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி கிடைத்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களால் இந்த சீசனில் ஆர்சிபி அணி தனது 5 சொந்த மைதான போட்டிகளை மட்டுமே பெங்களூருவில் விளையாடுகிறது. மீதமுள்ள 2 போட்டிகள் ராய்ப்பூரில் நடைபெற உள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இஷான் கிஷன் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.