பெங்களூரு : டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல்முறையாக மகளிர் பிரீமியர் லீக் தொடரை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதனை ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
ஐபிஎல் வரலாற்றிலே அதிக முறை மற்ற அணி ரசிகர்களால் கலாய்க்கப்பட்ட அணி என்றால் அது ஆர் சி பி மட்டும்தான். ஏனென்றால் அவெஞ்சர்ஸ் படத்தில் வரும் சூப்பர் ஹீரோ போல் கிறிஸ் கெயில், விராட் கோலி,ஏபி டிவில்லியர்ஸ், கே எல் ராகுல் போன்ற ஜாம்பவான் வீரர்களை ஆர் சி பி அணி வைத்திருந்தது.

இப்படி இருந்தும் ஆர் சி பி அணி முக்கிய போட்டிகளில் ஏதேனும் ஒரு மொக்கையான தவறை செய்து மண்ணை கவ்வும், அப்போதெல்லாம் ஆர் சி பி அணி ரசிகர்களை மற்ற ரசிகர்கள் போட்டு பொளப்பார்கள். சமூக வலைத்தளத்தில் நாங்கள் ஆர்சிபி ரசிகர் என்று சொல்லவே வெட்கப்படும் அளவிற்கு கேலி கிண்டல்கள் இருக்கும்.
ஆர் சி பி அணி ஒவ்வொரு முறையும் கோப்பையை இழக்கும் போதெல்லாம் பலர் கண்ணீர் சிந்திய காட்சிகள் மீம்சாக கூட மாறி இருக்கிறது. இந்த நிலையில் ஆண்கள் அணி செய்ய முடியாத சாதனையை மகளிர் அணி செய்து காட்டியிருப்பது யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆண்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல மகளிர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக 17 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு மகளிர் அணி மூலம் ஆர் சி பி அணிக்கு கோப்பை கிடைத்திருக்கிறது.

இதனை அடுத்து பெங்களூருவில் உள்ள முக்கிய வீதிகளில் ரசிகர்கள் திரண்டு உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். ஒரு உலக கோப்பையை வென்றால் எந்த அளவிற்கு உற்சாகம் இருக்குமோ அந்த அளவுக்கு பெங்களூருவில் மக்களின் சந்தோஷம் கரைபுரண்டு ஓடுகிறது. பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடும் நிலையில், அந்த மக்களுக்கு இந்த வெற்றி ஒரு நிம்மதியை கொடுத்திருக்கிறது.
சிஎஸ்கே, மும்பை அணி ஆகியோர் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தாலும், ஆர்சிபி மகளிர் அணி வென்று இருக்கும் இந்த முதல் கோப்பை வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக பெங்களூர் ரசிகர்கள் மாற்றி இருக்கிறார்கள். மக்கள் கூட்டத்தால் போக்குவரத்தும் ஸ்தம்பித்து இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஈ சாலா கப் நமதே என்ற வார்த்தைகள் தான் ஓலிக்கிறது. மகளிர் அணி சாதித்ததை போல் விராட் கோலி தலைமையிலான ஆடவர் அணியும் சாதித்தால் இந்த ஆண்டு ஆர் சி பி ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள்.