நமக்கு "டிரா" போதும், பேராசை கூடாது... "பங்களா"வுக்கு மொர்தஸா அறிவுரை!
பதுல்லா: வங்கதேசம், இந்தியாவை டெஸ்ட் போட்டியில் சந்திக்கும்போது டிராவுக்கே முயற்சிக்க வேண்டும். வேறு பெரிதாக ஆசைப்படுவது சரியாக இருக்காது என்று வங்கதேச ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் மஷரேப் பின் மொர்தஸா கூறியுள்ளார்.
எதார்த்த நிலையை வங்கதேசம் உணர்ந்து ஆட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். டிரா செய்தாலே அது கிட்டத்தட்ட நமக்கு வெற்றி போலத்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, அந்த அணியுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் நாளை சந்திக்கவுள்ளது. இந்த நிலையில் மொர்தஸா பேட்டி அளித்துள்ளார்.
அவரது பேட்டியிலிருந்து...

நல்லா பேட் செய்யனும்
நாம் நன்றாக பேட் செய்ய வேண்டியது அவசியம். ஆனால் பேட்டிங்கை மட்டும் வைத்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவது கடினம்.

டிரா போதும்
நாம் டிராவுக்கு குறி வைத்தாலே போதும். அதற்கு மேல் தேவையில்லை. விக்கெட்களை சரியான நேரத்தில் வீழ்த்துவதும், நல்ல உத்திகளும் நமக்கு சாதகமானதாக போட்டியை மாற்றும்.

எதிராளி பெரியவர்
எதிரில் நிற்பது பெரிய அணி. எனவே டிரா செய்வதற்கு முயற்சிப்பதே நல்லது. இதை ஆரம்பத்திலிருந்தே நான் சொல்லி வருகிறேன். டிராவை விட்டு விட்டு வேறு ஒன்றுக்கு ஆசைப்பட்டு போனால் விளைவுகள் கடுமையானதாக மாறலாம்.

நல்லா பேட் பண்ணுங்க
நமது பலம் பேட்டிங்தான். எனவே அதில் அதிக கவனம் செலுத்தினால் அதிக ரன் குவிக்க வாய்ப்பு கிடைக்கும். அதில் கவனம் செலுத்துவது நல்லது.

ஜெயிக்கனும்னு ஆசைதான்
எனக்கும் ஜெயிக்க வேண்டும் என்று ஆசைதான். ஆனால் எதார்த்த நிலையையும் நாம் பார்க்க வேண்டும். நம்மால் எதிரணியின் 20 விக்கெட்களையும் வீழ்த்த முடியும் என்றால் அதற்கேற்ப நாம் திட்டமிடலாம். முடியாதபோது டிராவை நோக்கி செல்வதே நல்லது. என்றார் அவர்.

7ல் 6ல் தோல்வி
வங்கதேசம் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பிறகு தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன்தான் 2000மாவது ஆண்டு ஆடியது. அதன் பிறகு மொத்தம் 7 போட்டிகளில் மோதியுள்ளது. அதில் ஒரு போட்டியைத் தவிர மற்ற 6 டெஸ்ட்களிலும் வங்கதேசம் தோல்வியைத் தழுவியுள்ளது.


Click it and Unblock the Notifications