மும்பை : இந்திய அணியின் வீரர் விராட் கோலி பயிற்சிப் போட்டியில் கூட பங்கேற்காமல் இரண்டு நாட்கள் அணியை விட்டு பிரிந்து மும்பை சென்றார்.
கோலி தன் சொந்த காரணங்களுக்காக இரண்டு நாட்கள் அணியுடன் பயணிக்காமல் மும்பை செல்கிறார் என்ற தகவல் மட்டுமே வெளியானது.

உலகக்கோப்பை தொடர் துவங்க சில நாட்களே உள்ளன. அதற்கான முன்னோட்டமாகவே பயிற்சிப் போட்டியில் இந்தியா பங்கேற்று வருகிறது. இந்த நிலையில், அணியுடன் இருக்காமல், ஏன் விராட் கோலி வெளியே சென்றார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
பொதுவான கிரிக்கெட் ரசிகர்கள் விராட் கோலியின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்து சமூக ஊடகங்களில் பேசத் துவங்கினர். அவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்தனர் கோலியின் ரசிகர்கள்.
குறிப்பாக, சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் கூட விராட் கோலிக்கு இரண்டு போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. அப்புறம் ஏன் அவர் மீண்டும் அணியை விட்டு தனிப்பட்ட காரணம் எனக் கூறி செல்ல வேண்டும்? என சிலர் கேள்வி எழுப்பினர்.
இந்திய அணி இரண்டு பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்க இருந்தது. முதல் பயிற்சிப் போட்டி அசாம் மாநிலம், கவுஹாத்தியில் நடைபெற இருந்தது. மழை காரணமாக அந்த போட்டி கைவிடப்பட்டது. அப்போது விராட் கோலி அணியுடன் தான் இருந்தார்.
அதன் பின் திருவனந்தபுரத்தில் நெதர்லாந்து அணியுடன் இரண்டாவது போட்டியில் இந்தியா ஆட இருந்தது. அதற்கு முன்பாகவே கோலி, கவுஹாத்தியில் இருந்து நேராக மும்பை சென்று விட்டார்.
தற்போது அவர் ஏன் அணியை விட்டு விலகிச் சென்றார் என்ற காரணம் தெரிய வந்துள்ளது. கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாகி இருப்பதாகவும், அதை ஒட்டி அவர் உடல்நிலை சற்று சரியில்லாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விராட் கோலி ஒரு கணவராக இந்த நேரத்தில் மனைவிக்கு ஆறுதலாக இருக்க வேண்டி சென்றுள்ளார். உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள கோலி தொடர்ந்து 45 நாட்கள் அணியுடன் பயணிக்க வேண்டும். தொடரின் இடையே வீட்டுக்கு சென்று வருவது சரியாக இருக்காது.
அதனால், உலகக்கோப்பை தொடர் துவங்கும் முன்பே மனைவியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் சென்று வந்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும் பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்திடம் அவர் அனுமதி பெற்றே சென்று இருக்கிறார். அதனால், இந்திய அணியில் குழப்பம் என சிலர் கொளுத்திப் போடுவதில் எந்த உண்மையும் இல்லை.