லெஜெண்ட்ஸ் லீக் தொடர்
குவாலிஃபையர் போட்டியில் பில்வாரா கிங்ஸ் மற்றும் இந்தியா கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. பில்வாரா அணிக்காக விளையாடிய யூசஃப் பதான் 24 பந்துகளில் 48 ரன்களை விளாசினார். மிட்செல் ஜான்சன் வீசிய 19வது ஓவரின் முதல் சில பந்துகளிலேயே 6,4,6 அடுத்தடுத்து விளாசினார். எனினும் ஜான்சன் 5வது பந்தில் யூசஃப் பதானின் விக்கெட்டை கைப்பற்றி பழிதீர்த்தார்.
கடுமையான சண்டை
விக்கெட்டை எடுத்தவுடன் சில விநாடிகளிலேயே மிட்செல் ஜான்சன் மற்றும் யூசஃப் பதான் ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. ஜான்சன் *** ஆஃப் என அசிங்கமாக கூற, அத்திரமடைந்த யூசஃப் பதான், ஜான்சனை நோக்கி கடுமையான வார்த்தைகளை பேசிக்கொண்டே சண்டைக்கு சென்றார். பதிலுக்கு ஜான்சனும் அவரை தள்ளிவிட, இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி சண்டையிட்டுக்கொண்டனர்.
பரபரப்பு குற்றச்சாட்டு
இந்நிலையில் இந்த சண்டை குறித்து ஆஸ்திரேலிய அணி தரப்பில் பரபரப்பு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதாவது இப்போட்டிக்கு பெண் நடுவரான காட்டன் பணிபுரிந்தார். அப்போது ஜான்சன் வீசிய ஒரு பந்திற்கு அவர் வைட் கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த யூசஃப் பதான் நடுவரை வம்புக்கு இழுத்தார். இது தான் பிரச்சினைக்கு உண்மை காரணம் என பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அபராதம் விதிப்பு
இது ஒருபுறம் இருக்க, ஜான்சன் மீது தான் தவறு உள்ளது என தொடரின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜான்சன் தான் முதலில் பிரச்சினை செய்ததாக கூறி போட்டி கட்டணத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. யூசஃப் பதானுக்கு எந்தவித அபராதமும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.