மும்பை : ரோகித் சர்மாவுக்கு பிறகு அடுத்த இந்திய அணி கேப்டன் என்ற பதவியில் முதன்மையாக இருந்தவர் ஹர்திக் பாண்டியா. ஆனால் ஒரே தொடரில் தற்போது ஹர்திக் பாண்டியா கோபுரத்திலிருந்து தெருவுக்கு வந்து இறங்கி விட்டார்.
இதற்கு காரணம் ஹர்திக் பாண்டியாவின் வாய்க்கொழுப்பு மற்றும் திமிர் தான் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டன் பதவியில் இருந்த ஹர்திக் பாண்டியா ஒரு முறை கோப்பையையும் அடுத்த முறை இறுதிப்போட்டி வரையும் வந்து அசத்தினார்.

இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு இந்திய அணியின் துணை கேப்டன் என்ற பதவி மட்டுமல்லாமல் டி20 அணியின் கேப்டன் என்ற பொறுப்பும் கிடைத்தது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியா எடுத்த முடிவுகள் தான் அவருக்கு ஆபத்தாக வந்து இருக்கிறது. இரண்டாவது டி20 போட்டியில் சாஹல் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் 18 வது ஓவரை அவருக்கு வழங்காமல் வேகப்பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு வழங்கி அந்த போட்டியில் இந்தியா தோற்றது.
மேலும் தோல்வியை குறித்து பேசும்போது தான் கூல் கேப்டன் என்று காட்டிக் கொள்வது போல் திமிராக பேசி சிக்கிக் கொண்டது மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட் வாரியத்தை வெட்ட வெளியில் விமர்சித்தது, பிசிசிஐ நிர்வாகிகள் மத்தியில் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டது , அணி தேர்வில் குழப்பம், அக்சர் பட்டேலுக்கு முழு ஓவர் வழங்காமல் விட்டது என பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் ஹர்திக் பாண்டியா மீது வந்தது.
மேலும் வித்தியாசமாக பேசுகிறேன் வித்தியாசமாக செய்கிறேன் என்று தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்ததால் இரண்டு உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறாத ஒரு அணியுடன் தோல்வியை தழுவி தனது கேப்டன்ஷிப் பயணத்தில் மிகப்பெரும் சரிவை பாண்டியா சந்தித்தார். மேலும் இந்த தொடரில் இந்திய வீரர்களிடம் ஒரு உத்வேகமே இல்லாமல் இருந்தது. இதற்கு ஹர்திக் பாண்டியா தான் காரணம் என பிசிசிஐ நிர்வாகிகள் நினைக்கின்றனர். இதனால் இனி ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு பும்ராவை சேர்க்க இந்திய அணி நிர்வாகம் யோசித்து வருகிறது.