அகமதாபாத் : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 8வது முறையாக வீழ்த்தி இந்திய அணி தங்களுடைய சாதனையை தொடர்ந்து வருகிறது. அகமதாபாத்தில் ஒரு லட்சம் மக்களுக்கு முன்பு நடத்தப்பட்ட இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

பாகிஸ்தான் அணி பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல பார்மில் இருந்ததால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை ஆட்டத்தின் பாதியில் தலைகீழ் மாறியது.
பாகிஸ்தான அணி 155 ரன்கள் இரண்டு விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த போது அடுத்த 36 ரன்கள் சேர்ப்பதற்குள் எட்டு விக்கெட்டுகளை இழந்தது. 192 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் அதிரடியாக விளையாடி வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இந்தியாவில் வெற்றிக்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இதில் முதல் காரணமே டாசில் சரியாக பந்துவீச்சை தேர்வு செய்தது தான்.
ஏனென்றால் பாகிஸ்தான் அணிக்கு ஒரு இலக்கை கொடுத்து விட்டால் அவர்கள் அதனை எட்டுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. மேலும் அகமதாபாத் ஆடுகளம் இரவு நேரத்தில் ரன் குவிப்புக்கு சாதகமாக மாறுகிறது. இதன் காரணத்தால் இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதேபோன்று கேப்டன் ரோகித் சர்மாவின் அபாரமான நுணுக்கங்களால் பாகிஸ்தான அணி கடுமையாக தடுமாறியது.
குறிப்பாக அவர் பாகிஸ்தான் அணியின் நடுவரிசை வீரர்கள் தளத்திற்கு வந்தபோது குல்தீப் யாதவையும் பும்ராவையும் மாற்றி பயன்படுத்தினார். இதன் மூலம் விக்கெட்டுகள் சரிந்தது. இதேபோன்று முஹமது சிராஜ் மீது அவர் வைத்த நம்பிக்கையும் வீண் போகவில்லை. அவரும் பாபர் அசாமின் விக்கெட்டை வீழ்த்தி ரோஹித் வைத்த நம்பிக்கையை காப்பாற்றினார்.
இதேபோன்று பேட்டிங் வந்தவுடன் இந்திய அணி அதிரடியாக விளையாட முயற்சி செய்தது. குறிப்பாக 192 ரன்கள் என்ற எளிய இலக்கை எதிர்கொள்ளும் போது மிகவும் பொறுமையாக விளையாடுவதும் சில சமயம் ஆபத்தை கொடுக்கும்.இதனால் என்ன நடந்தாலும் பரவாயில்லை என அதிரடியாக இந்தியா விளையாடியது.
இதில் கில் 16 ரன்களில் வெளியேறினாலும் ரோகித் சர்மா அடிக்க வேண்டிய பந்தை அடித்து விட வேண்டிய பந்தை விட்டு ஆட்டத்தை தனி ஆளாக மாற்றினார். குறிப்பாக ஷாகின் அப்ரிடி ஓவரை அபாரமாக எதிர்கொண்ட ரோகித் சர்மா ஒரு கட்டத்திற்கு மேல் கவுண்டர் அட்டாக்கை ஆடினார். இதனால் அவர் 63 பந்துகளில் எல்லாம் 86 ரன்கள் சேர்த்தார்.
இப்படி எளிய இலக்கை எதிர்கொள்ளும் போது ஒரு பேட்ஸ்மேன் அதிரடியாக விளையாடி ரன் குவித்தால் அது பந்து வீசும் அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். அவருடைய உடல் மொழியை அது நிச்சயம் பாதிக்கும். ரோகித் சர்மாவின் இந்த அதிரடி ஆட்டத்தை கொஞ்சம் எதிர்பார்க்காத பாகிஸ்தான் நிலைகுலைந்து போனது.

மேலும் எளிய இலக்கு என்பதால் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் எட்டி விடலாம் என்ற நம்பிக்கை இந்திய அணி வீரர்களுக்கு இருந்தது. பாகிஸ்தான் அணியிடம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தான் இருந்தது தவிர அதனை செயலாற்றக்கூடிய ஒரு ஃபார்முலாவை அவர்கள் பயன்படுத்தவில்லை. ஆனால் இந்தியாவிடம் வெற்றி பெறுவதற்கான திட்டமும் அதற்கு தேவையான வீரர்களும் களத்தில் இருந்தார்கள். இதனால் விளையாடிய மூன்று போட்டிகளுமே இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது.