
கோலிக்கு ஆபத்து
கடந்த 2 வருடங்களுக்கு மேலாக சதம் அடிக்காமல் விராட் கோலி ஏமாற்றி வருகிறார். அவரது ரன்கள் அடிக்கும் விகிதமும் குறைந்து வருகிறது. எதிரணிகளை பயம் காட்டி வைத்திருந்த கிங் கோலி, இன்று வந்த வேகத்தில் ஆட்டமிழந்து வருகிறார். இதனால் விராட் கோலி ஓய்வு எடுத்து திரும்ப வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் அணியில் அவரது இடத்துக்கு வேட்டு வைக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஓரங்கட்ட திட்டம்
பி.சி.சி.ஐ. தலைமை இடத்தில் சுமூக உறவு இல்லை, கேப்டன் பதவியும் போய்விட்டது. இப்போது ரன்னும் அடிக்கவில்லை என்றால் இதனையே காரணம் காட்டி அவரை ஓரங்கட்ட சிலர் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுக்கு எல்லாம் காரணம், விராட் கோலியின் ஆபத்தான காதல் தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

கோலியின் காதல்
ஒரு இளைஞனுக்கு காதல் என்ன செய்யும், பிடித்த பெண் பின்னால் சுற்ற வைக்கும். ஒரு குழந்தைக்கு நட்சத்திரம் மீது காதல் வந்தால் என்ன செய்யும், அந்த நட்சத்திரத்தை எட்டி பிடிக்க வைக்கும். ஆனால் விராட் கோலிக்கு வந்திருக்கும் காதல், ஆஃப் ஸ்டம்ப் லைனில் வரும் பந்துகள் மீது தான். ஆம், எந்த பந்துவீச்சாளர் விராட் கோலிக்கு நான்காவது, ஐந்தாவது ஆஃப் ஸ்டம்ப் லைனில் பந்து வீசுகிறாரோ, அதனை உடனே அடிக்க நினைத்து எட்ஜ் ஆகி ஆட்டமிழந்து வருகிறார்.

எப்போது விடுவார்?
இன்றைய போட்டியில் கூட அதிரடியாக 3 பவுண்டரிகளை விளாசிய விராட் கோலி, ஆஃப் ஸ்டம்ப் லைனில் வந்த பந்தை தொட்டு ஆட்டமிழந்தார். இது தற்போது விராட் கோலிக்கு ஒரு குறையாகவ பார்க்கப்படுகிறது. ஆஃப் ஸ்டம்ப் லைனில் செல்லும் பந்தை தொட மாட்டேன் என்று எப்போது அவர் விடுகிறாரோ, அப்போது தான் கோலிக்கு நல்லது. இல்லையேனில் விடாத கருப்பு போல் தொடரும்.


Click it and Unblock the Notifications











