
பரபரப்பு சம்பவம்
இந்த போட்டியில் இந்திய அணி கடைசி வரை வெற்றி பாதையில் சென்ற போதும், கடைசி ஓவரில் தோற்றுவிடுமோ என்ற அச்சத்தை கொடுத்தது. இதற்கு காரணம் பாண்ட்யாவின் முடிவு தான். இலங்கை அணி வெற்றி பெற கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணி 134/8 என மோசமான நிலைமையில் இருந்தது. அப்போது 19வது ஓவரை வீசிய ஹர்ஷல் பட்டேல் நோ பால், வைட், சிக்ஸர் என விட்டுக்கொடுக்க 16 ரன்களை இலங்கை விளாசியது.

கடைசி ஓவரில் ட்விஸ்ட்
இதனால் கடைசி ஓவரில் 13 ரன்களே தேவை என்ற சூழல் வந்தது. அப்போது 3 வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓவர்கள் முடிந்துவிட, ஹர்திக் பாண்ட்யா 3 ஓவர்களை மட்டுமே வீசியிருந்தார். அதுவும் 12 ரன்களை மட்டுமே கொடுத்து நல்ல எகானமியுடன் இருந்தார். எனவே அவர் தான் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆச்சரியம் தரும் வகையில் அக்ஷர் பட்டேலை பந்துவீச வைத்தார். அவரோ முதல் பந்து வைட், பின்னர் டாட், சிக்ஸர் என கடைசி வரை பரபரப்பாக கொண்டுச் சென்று 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

எதற்காக அக்ஷர் வீசினார்?
இந்நிலையில் ஹர்திக் எதற்காக ஸ்பின்னரிடம் பந்தை கொடுத்தார் எனத்தெரியவந்துள்ளது. அதாவது போட்டியின் போது பாண்ட்யாவுக்கு திடீரென தசைப்பிடிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவர் சரியாக தூங்கவில்லை என்றும் தேவையான அளவிற்கு தண்ணீர் குடிக்காமல் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இதனால் தசைகள் வறண்டு பிடித்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை வீசியிருந்தால்?
ஒருவேளை ஹர்திக் கடைசி ஓவரை வீசியிருந்தால் தசைப்பிடிப்பின் காரணமாக சரியான லைன் மற்றும் லெந்த்-ல் வீச முடியாமல் ரன்களை வாரி வழங்கி இருக்கலாம். கடைசி ஓவரில் சமீகா கருணரத்னே, சிக்ஸர் விளாசக்கூடியவராக இருந்தார். அதுபோன்ற சமயத்தில் தவறான லைனில் பந்துவீசினால் நிச்சயம் 2 பந்துகளில் ஆட்டம் முடிந்திருக்கும். இதன் காரணமாகவே நல்ல பவுலரை வைத்து ரிஸ்க் எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications