மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உலகக் கோப்பை தொடரை எப்போதுமே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
உலகக்கோப்பை எப்போது வரும் என ஒவ்வொரு நாளையும் காதலிக்காக காத்திருக்கும் காதலன் போல் ரசிகர்கள் காத்திருப்பார்கள். ஆனால் இம்முறை என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்பது போல் உலக கோப்பையை பார்த்தாலே ரசிகர்கள் எரிச்சல் அடைகின்றனர்.

இதுவே 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெற்ற போது ஒட்டுமொத்த இந்தியாவுமே இந்த தொடரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது. காரணம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் நம்பிக்கையிலிருந்தது தான். மேலும் சச்சின், சேவாக் போன்ற வீரர்களுக்கு இதுதான் கடைசி உலக கோப்பை என்பதால் அவர்களுக்கு பிரியாவிடை அளிக்க ரசிகர்களும் காத்திருந்தனர்.
இம்முறை உலகக் கோப்பை நடைபெறுகிறது என்று செய்தித்தாள்களிலும் இணையதளத்திலும் தான் பார்க்க முடிகிறது. தவிர பொதுவான மக்களிடையே எந்த எதிர்பார்ப்பையும் பார்க்க முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் பிசிசிஐயின் பண ஆசைதான் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுவாக உலக கோப்பைக்கு என ஒரு நல்ல பாடல் முதலில் வெளியாகும்.
ஆனால் இம்முறை வெளியான பாடலைப் பார்த்து, தயவு செஞ்சு எங்களை விட்டுடுங்கடா என்பது போல் ரசிகர்களை கெஞ்ச வைத்திருக்கிறது. இதேபோன்று உலகக்கோப்பை தொடருக்கு என தொடக்க விழா நடைபெறும். 2011 உலகக் கோப்பை தொடக்க விழா வங்கதேசத்தில் மிக பிரமாதமாக நடைபெற்றது. 2019 உலகக்கோப்பை கூட லண்டனில் விமர்சையாக நடைபெற்றது. ஆனால் இம்முறை அப்படி எந்த ஒரு உலகக்கோப்பை தொடக்க விழாவும் நடத்தப்படவில்லை.
மேலும் வார இறுதி நாட்களில் தான் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை அஜித் குமாரின் சென்டிமென்ட் படி வியாழக்கிழமை முதல் போட்டி நடத்தப்படுகிறது. முக்கியமான காரணம் மழைக்காலத்தில் உலகக் கோப்பை நடைபெறுவதால் எப்படியும் போட்டிகள் மழையால் பாதிக்கப்படும் என ரசிகர்களுக்கு முன்கூட்டியே தெரிந்து விட்டது.
எப்படி படம் ரிலீஸ்க்கு ட்ரெய்லர் விடுவார்களோ அதை போல் உலகக் கோப்பையில் என்ன நடக்கப்போகிறது என்பதை ஆசிய கோப்பையிலும் பயிற்சி ஆட்டத்திலும் இந்திய ரசிகர்கள் நன்றாகவே பார்த்து விட்டார்கள். இது அனைத்துக்கும் முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அது டி20 கிரிக்கெட்டின் தாக்கம் தான். ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு என ஒரு சிறப்பு இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறிய வடிவமாக தான் ஒரு நாள் கிரிக்கெட் இருக்க வேண்டுமே தவிர, t20 கிரிக்கெட்டின் பெரிய வடிவமாக இருக்கக் கூடாது.
பேட்டிங்கிற்கும் பந்துவீச்சுக்கும் சரிசமமான போட்டியில்லாததால் ஒருநாள் கிரிக்கெட் தற்போது அழிவின் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஐ சி யு வில் இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட்டை உலகக்கோப்பை ஆக்சிஜன் கொடுத்து காப்பாற்றும் என நினைத்தால் இதுவும் பக்கத்து படுக்கையில் அட்மிஷன் போட்டு படுத்து இருக்கிறது. இவர்களை குணப்படுத்துவது மருத்துவர் கையில்தான் இருக்கிறது. ஆனால் அந்த மருத்துவர் தற்போது ஜெய்ஷா என்பதுதான் பிரச்சனையே.