மும்பை: நாங்க தோற்கவில்லை, ஆனால் அவங்க ஜெயிச்சாங்க என்பது போல, பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததால்தான் தோல்வியடைந்தோம் என்கிறார் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் நடப்பு சாம்பியனான மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் 23வது ஆட்டத்தில் மும்பையும் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில், 31 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வென்றது.
இந்த சீசனில் மிகவும் குறைந்தபட்ச ஸ்கோரான 118 ரன்களுக்கு ஹைதராபாத் சுருண்டது. நடப்பு சாம்பியனான மும்பை 5ல் 4ல் தோல்வி அடைந்திருந்தது. ஆஹா, இந்த ஆட்டத்தில் மும்பை கண்டிப்பா ஜெயி்ச்சுடும்டா என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மும்பை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 87 ரன்களுக்கு மூட்டைக் கட்டியது. இந்த சீசனில் இதுதான் மிகவும் மோசமான தோல்வியாகும்.
நடப்பு சாம்பியன் அணி மிகவும் மோசமான நிலையில் உள்ளது குறித்தும், நேற்றைய ஆட்டத்தில் மிக மோசமாக தோல்வி அடைந்தது குறித்தும் சமூக தளங்களில் பலரும் கிணடல் செய்து வருகின்றனர். அதையெல்லாம்விட, போட்டியின் முடிவில் அணியின் தோல்வி குறித்து ரோஹித் சர்மா கூறியதே, மிகச் சிறந்த கிண்டலாகும்.
பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு ஹைதராபாத் அணியை கட்டுப்படுத்தினார்கள். ஆனால் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை. நான் யாரையும் தனிப்பட்ட முறையில் குறை சொல்ல விரும்பவில்லை என்று மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
இந்திய அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோஹித் சர்மா, இந்த சீசனில் 6 ஆட்டங்களில் 140 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்சமாக 94 ரன்கள் எடுத்தார். நேற்றைய ஆட்டத்தில் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதுவும் சரிதான். அவர் பேட்ஸ்மேன்கள் என்று தன்னைப் பற்றித்தான் கூறியுள்ளார்.