மும்பை: துலீப் டிராபி தொடரில் வடக்கு மண்டல அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது ஏன் என்ற குழப்பத்திற்கு விடை கிடைத்துள்ளது. ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு இருந்ததால், ஸ்ரேயாஸ் ஐயர் துலீப் டிராபி தொடரில் கேப்டன்சியை ஏற்க முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக முன் நின்று ஸ்ரேயாஸ் ஐயர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை வியக்க வைத்தது. இதனால் ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பிடிப்பார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்யாமல் புறக்கணித்துள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்யாதது இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டு ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாமல் நிராகரிப்பட்டதற்கு இந்திய முன்னாள் வீரர்கள் அஸ்வின், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் மாற்று வீரர்களுக்கான பட்டியலில் கூட ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படவில்லை.
சுப்மன் கில்லை விடவும் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடக் கூடியவராக இருந்தும் வாய்ப்பு வழங்காதது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடர்பான துலீப் டிராபி தொடங்க உள்ளது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் வடக்கு மண்டல அணிக்காக களமிறங்க உள்ளார்.
ஷர்துல் தாக்கூர் தலைமையின் கீழ் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட இருப்பது அடுத்த சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இதுகுறித்து விசாரித்த போது, துலீப் டிராபி தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரிடம் வடக்கு மண்டல அணியின் பொறுப்பை எடுத்துக் கொள்கிறீர்களா என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஸ்ரேயாஸ் ஐயர், ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டால், என்னால் விலக வேண்டிய சூழல் நேரிடும்.
இதனால் மற்ற வீரர்களுக்கு கேப்டன்சி வாய்ப்பை கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதன்பின் ஷர்துல் தாக்கூர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இதன் மூலமாக ஸ்ரேயாஸ் ஐயர் அதிக நம்பிக்கையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.