லக்னோ: உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடர் தோல்விகளுக்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது அந்த அணி வீரர்களை கடந்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. ஏனென்றால் இந்திய அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா, 2வது போட்டியில் நிச்சயம் கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தென்னாப்பிரிக்கா அணியிடமும் மோசமான தோல்வியடைந்து பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

ஒரு காலத்தில் Mighty Australia என்று ஆஸ்திரேலிய அணியை அழைப்பார்கள். அதற்கு ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவதற்கு எந்த அணியாலும் முடியவில்லை. இவ்வளவு ஏன் உலகக்கோப்பை தொடர்களில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மெக்ராத் மொத்தமாகவே 5 பந்துகளை மட்டுமே பேட்டிங்கில் எதிர்கொண்டுள்ளார். ஆனால் கடந்த ஒரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கும், 177 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகியுள்ளது தான் ரசிகர்களுக்கு பெரிய சோகமாக மாறியுள்ளது.
போராடாமல் ஆஸ்திரேலியா அணி தோல்வியடைவதற்கு அந்த அணியின் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக எடுத்த முடிவுகளே காரணமாக அமைந்துள்ளது. டிராவிஸ் ஹெட் காயமடைந்துள்ளார் என்பதை அறிந்தும் அவருக்கு மாற்று வீரரை தேர்வு செய்யாதது, மிடில் ஆர்டரில் வலிமையான வீரரான மிட்செல் மார்ஷை தொடக்க வீரராக களமிறக்குவது, ஆடம் ஸாம்பாவிற்கு உதவியாக மேக்ஸ்வெல்லை மட்டும் அழைத்து வந்தது, டாஸில் சொதப்புவது என்று ஏராளமான காரணங்களை சொல்லலாம்.
அதேபோல் ஆஸ்திரேலிய அணிக்கு அட்டவணையும் கடினமாகவே அமைந்துள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட பின் ஆஃப்கானிஸ்தானுடன் விளையாடியதை போல், ஆஸ்திரேலிய அணிக்கு 2வது போட்டி ஒரு சிறிய நாடுடன் அமைந்திருக்க வேண்டும். ஏனென்றால் பிளேயிங் லெவனில் உள்ள வீரர்கள் அனைவரும் உலகக்கோப்பைக்கு முன் எந்த போட்டியிலும் ஒன்றாக இணைந்து விளையாடவில்லை.
காயமடைந்த மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் என்று அத்தனை வீரர்களும் நேரடியாக உலகக்கோப்பை தொடரில் களமிறங்கியுள்ளனர். அதேபோல் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதில்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் ஒருநாள் கிரிக்கெட் பக்கமே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.