மும்பை: இந்திய அணியின் முக்கிய நட்சத்திர வீரரான ஹர்திக் பாண்டியா, அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கை பிரிந்து இருக்கிறார். அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து பெற உள்ளனர். இந்த நிலையில், அவர்கள் பிரிவுக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து அவர்களின் குடும்ப நண்பர் ஒருவர் ஊடகங்களிடம் பேசி இருக்கிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா லாக்டவுன் சமயத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா தங்கள் வீட்டில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தார். நான்கு ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக இருந்தனர். இந்த நிலையில், 2024 டி20 உலக கோப்பை முடிந்தவுடன் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா பிரிவதாக அறிவித்தனர்.

இதன் பின்னணி குறித்து விளக்கிய அவர்களின் குடும்ப நண்பர், ஹர்திக் பாண்டியாவின் "தனிநபர் பிம்பம்" தான் அவர்கள் உறவிற்கு மிகப்பெரிய தடையாக இருந்ததாக கூறி இருக்கிறார். திருமணம் ஆனது முதல் ஹர்திக் பாண்டியாவின் வாழ்க்கை முறை நடாஷாவிற்கு ஒத்துப் போகவில்லை. ஹர்திக் பாண்டியா எப்போதும் தன் தனிப்பட்ட வாழ்க்கையை விட, தனது இமேஜ் முக்கியம் என கருதி, அதற்கான விஷயங்களை மட்டுமே செய்ததாகவும், ஹர்திக் பாண்டியா ஓடும் வேகத்திற்கு ஏற்ப நடாஷாவால் ஈடு கொடுத்து வாழ்க்கையை நடத்த முடியவில்லை எனவும் அவர் கூறி இருக்கிறார்.
மேலும், குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட முடியாத சூழ்நிலையில் அவர்களுக்கு இடையேயான பிரிவு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே சென்றதாகவும், ஒரு கட்டத்திற்கு மேல் நடாஷா சோர்வடைந்து, "இனி பிரிந்து விடலாம்" என்ற முடிவை எடுத்ததாகவும் கூறி இருக்கிறார். இது சில நாட்களில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. ஓராண்டுக்கும் மேலாக காத்திருந்து இந்த முடிவை நடாஷா எடுத்து இருக்கிறார் என்றார்.
இதன் இடையே ஹர்திக் பாண்டியா பிரிட்டிஷ் பாடகி ஜாஸ்மின் வாலியாவுடன் சுற்றித் திரிந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. பலரும் அதனால்தான் நடாஷா பிரிந்துவிட்டார் என சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.