சென்னை : ஆஸ்திரேலிய அணி இந்திய அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
இந்தப் போட்டியில் 200 ரன்களை துரத்திய இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது.
அந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவால் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம், அந்த அணியின் ஒரு முக்கிய பலவீனம் தான். அது ஆறு முழு நேர பந்துவீச்சாளர்கள் இல்லாதது தான்.

பேட்டிங் ஓகே : இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது ஆஸ்திரேலியா. கடினமான ஆடுகளத்தில் போராடி அந்த அணி 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது குறைவு என்பது போல இருந்தாலும், டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் போன்ற ஒரு இடத்தில் ஆடி 199 ரன்கள் எடுப்பது சராசரி தான். மோசம் என கூற முடியாது. இன்னும் 30 ரன்கள் கூடுதலாக எடுத்து இருந்தால் இந்தியாவுக்கு சிக்கலாக கூட மாறி இருக்கும். அது மட்டும் தான் பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவிடம் குறை.
3 விக்கெட் : அடுத்து ஆடிய இந்திய அணியும் பிட்ச்சின் கடினத் தன்மையை உணரும் முன்பே 2 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்தது. இஷான் கிஷன், ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் என மூன்று இந்திய வீரர்கள் டக் அவுட் ஆகி வெளியேறினார்கள். ஆஸ்திரேலியா அந்த இடத்திலேயே போட்டியை தன் கையில் எடுத்துக் கொண்டது.
இரண்டே வீரர்கள்தான் : ஆனால், அதன் பின் நீண்ட நேரம் விக்கெட்டே விழவில்லை. மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசல்வுட் புது பந்தில் பிட்ச்சின் கடினத் தன்மையை பயன்படுத்தி எடுத்த 3 விக்கெட்டுக்கு பின் எந்த பவுலராலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. கோலி - ராகுல் ஜோடி அனைவரையும் எளிதாக சமாளித்தது.
ஜம்பா ஏமாற்றம் : இந்திய அணி மூன்று முழு நேர ஸ்பின்னர்களை வைத்து ஆடியது. அதுவே ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு சுருண்டு போக காரணம். அதே போல, ஆஸ்திரேலியாவில் ஒரே ஒரு முழு நேர ஸ்பின்னரான ஆடம் ஜம்பா இந்தப் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்த்த நிலையில், அதிக ரன்களை கொடுத்த வீரரே அவர்தான். 8 ஓவர்களில் 53 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை ஜம்பா.

கம்மின்ஸ் செய்த தவறு : மேலும், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் ஒரு தவறை செய்தார். ஹேசல்வுட், ஸ்டார்க் விக்கெட் வீழ்த்திய பின் சில ஓவர்கள் மட்டுமே வீசினார்கள். அதன் பின் 20 ஓவர்கள் முடிந்த பின்னரே அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தார் கம்மின்ஸ். இடையே அவர்களில் ஒருவரை வீச வைத்திருந்தாலும் கோலி - ராகுல் ஜோடிக்கு சிக்கலாகி இருக்கும். அதை அவர் செய்யவில்லை.
கூடுதல் பவுலர் இல்லை : அதே போல ஆஸ்திரேலிய அணியில் கூடுதல் பவுலர் இல்லை, ஹேசல்வுட், பாடி கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா என நான்கு முழு நேர பந்துவீச்சாளர்களும், மேக்ஸ்வெல் என்ற பகுதி நேர பந்துவீச்சாளரும் மட்டுமே உள்ளனர். மேக்ஸ்வெல்-ஐயே முழு நேர பந்துவீச்சாளராக மாற்றித்தான் ஆஸ்திரேலியா ஆடியது. அந்த திட்டம் வேலை செய்யாததே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணம், இதுவே அந்த அணியின் பெரிய பலவீனம்.