மூன்றாவது முறை
டெஸ்ட் போட்டியில் மிகவும் குறைந்த இலக்கு இருந்தும் இந்தியா தோல்வியடைவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் எதிராக 1997ல் 120 ரன்கள், இலங்கைக்கு எதிராக 2015ல் 176 ரன்கள் இலக்கு இருந்தும் இந்தியா தோல்வியடைந்தது.
சரிந்த விக்கெட்கள்
இந்த போட்டியில் நான்கு நாட்களில் 4 இன்னிங்ஸ் விளையாடப்பட்டு, 40 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. இங்கிலாந்து அணியும் பேட்டிங்கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், சொந்த மண்ணில் விளையாடுவது, பவுலிங் வலிமையாக இருப்பது அதற்கு மிகவும் சாதகமானது.
ஆறுதல் அளித்த கோஹ்லி
இந்திய அணியில் கேப்டன் விராட் கோஹ்லி இரண்டு இன்னிங்ஸிலும் அபாரமாக விளையாடினார். இந்த டெஸ்டில் சதமடித்த ஒரே வீரர் அவர்தான். மற்ற எவரும் அரை சதத்தை எட்டவில்லை. முதல் இன்னிங்ஸில் 149 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்களும் அடித்தார். அதாவது அணியின் ஸ்கோரில் 45.87 சதவீதம் கோஹ்லி அடித்ததாகும்.
பேட்டிங் தேறணும்
மிகவும் வலிமையான பேட்டிங் வரிசை கொண்ட அணி என்று பெயரெடுத்த இந்தியா, இந்தப் போட்டியில் பவுலிங்கில் சாதித்தாலும், பேட்டிங்கில் சொதப்பியது. அடுத்த டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 9ம் தேதி துவங்க உள்ளது. பேட்டிங்கில் சரியாக சோபித்தால் மட்டுமே, அடுத்த டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தவிர்க்க முடியும்.