மெல்போர்ன்: மெல்போர்னில் பயிற்சி ஆட்டத்தின் போது பந்து தாக்கியதில் 17 வயது இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் உயிரிழந்தார். சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய வீரர் பில் ஹியூஸ் இதே போன்று மைதானத்தில் உயிரிழந்த சோக நிகழ்வை மீண்டும் நினைவூட்டி இருக்கிறது இந்த சோக சம்பவம். மேலும், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பென் ஆஸ்டின் என்ற 17 வயது இளம் கிரிக்கெட் வீரர், மெல்போர்னின் கிழக்குப் பகுதியில் உள்ள ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப்பிற்காக விளையாடி வந்தார். செவ்வாய்க்கிழமை மாலை, ஃபெர்ன்ட்ரீ கல்லியில் உள்ள வாலி டெவ் ரிசர்வ் மைதானத்தில் டி20 போட்டிக்கு முன்னதாக வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தானியங்கி பந்துவீச்சு இயந்திரத்தில் (Automatic Bowling Machine) இருந்து வந்த பந்து, எதிர்பாராதவிதமாக அவரது கழுத்துப் பகுதியில் அதிவேகமாகத் தாக்கியது. அவர் ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும், இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்து நிகழ்ந்தது.

பந்து தாக்கியதும் நிலைகுலைந்து சரிந்த பென் ஆஸ்டினுக்கு, மைதானத்தில் இருந்தவர்கள் உடனடியாக முதலுதவி அளித்தனர். விரைந்து வந்த மருத்துவ அவசர ஊர்தி குழுவினர், அவரை மோனாஷ் மருத்துவ மையத்திற்கு ஆபத்தான நிலையில் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அன்று அவர் உயிரிழந்ததாக ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பென் ஆஸ்டினின் மரணம் குறித்து அவரது ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப் வெளியிட்ட அறிக்கையில், "பென்னின் மறைவால் நாங்கள் முற்றிலும் மனமுடைந்து இருக்கிறோம். இந்த மரணத்தின் தாக்கம் எங்கள் கிரிக்கெட் சமூகத்தில் உள்ள அனைவராலும் உணரப்படும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பென்னை அறிந்த அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விக்டோரியா கிரிக்கெட் வாரியமும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் இந்தச் சம்பவத்திற்குத் இரங்கல் தெரிவித்துள்ளன. மேலும், பென் ஆஸ்டினின் குடும்பத்திற்கும், கிளப்பிற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளன.
2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பில் ஹியூஸின் மரணத்தை அப்படியே கண்முன் நிறுத்துகிறது இந்த சம்பவம். அப்போது சிட்னியில் நடந்த ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியின் போது, வேகப்பந்து வீச்சாளர் வீசிய பவுன்சர் பந்து ஹியூஸின் கழுத்தைத் தாக்கியது. அதனால் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக அவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.
அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கிரிக்கெட்டில் வீரர்களின் பாதுகாப்பு குறித்த பல புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. தற்போது பென் ஆஸ்டினின் மரணமும் அதே போன்ற ஒரு பகுதியில் பந்து தாக்கியதால் நிகழ்ந்து இருக்கிறது. இது பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.