இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்டில் சாதனை படைத்த ஸ்மித், மேக்ஸ்வெல், ராகுல்
சென்னை: ஆஸி. வீரர்கள் ஸ்மித், மேக்ஸ்வெல், இந்திய வீரர் ராகுல் ஆகியோர் இந்த டெஸ்ட் தொடரில் புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்தது ஆஸ்திரேலியா.
ஆட்டத்தின் முதல் நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 117 ரன்களுடனும், அதிரடி வீரர் கிளன் மேக்ஸ்வெல் 82 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஸ்மித் சாதனை
இந்த நிலையில் 2வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ஸ்மித் 178 ரன்கள் விளாசிஅவுட்டானார். இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் பதிவு செய்த 3வது அதிகபட்ச டெஸ்ட் ரன் இதுவாகும். முன்னதாக டீன் ஜோன்ஸ் சென்னையில் 1986ம் ஆண்டு நடந்த டெஸ்டில் 210 ரன் எடுத்தது அதிகபட்சமாகும்.

முந்தைய சாதனைகள்
2001ல் சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில், மேத்யூ ஹைடன் 203 ரன் விளாசியது 2வது அதிகபட்ச ஸ்கோராகும். ஸ்மித் இப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார்.

மேக்ஸ்வெல் முதல் சதம்
ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், டெஸ்டில் தனது முதல் சதத்தை நேற்று விளாசினார். இதன் மூலம், டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று வகை போட்டிகளிலும் சதம் விளாசிய 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார். ஷேன் வாட்சன் இந்த சாதனையை ஏற்கனவே செய்துள்ளார்.

ராகுல் சாதனை
இந்த போட்டியில் இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 67 ரன்கள் சேகரித்தார். நடப்பு தொடரில் அவர் அடித்த 4வது அரைசதம் இதுவாகும். புனேயில் 64, 51 ரன்களும், பெங்களூரில், 90, 67 ரன்களும் விளாசினார். ஒரு தொடரில் சதமும் அடிக்காமல் தொடர்ந்து 4 அரைசதங்களை அடித்த 3வது இந்திய தொடக்க ஆட்டக்காரர் ராகுல் ஆவார்.

சித்து
சேத்தன் சவுகான் 1978-79ல் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராகவும், 1979ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், நவ்ஜோத் சித்து 1998ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இச்சாதனையை செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications