ஆர்சிபி அணி தீவிர பயிற்சி
ஐபிஎல் 2020 தொடர் ஆரம்பிக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் 8 அணிகளை சேர்ந்த வீரர்களும் தங்களை போட்டிகளுக்காக தீவிரமாக தயார் படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆர்சிபி அணி வீரர்களும் முதலில் துபாயில் தீவிர பயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக தற்போது ஷார்ஜாவில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விராட் கோலி பாராட்டு
கடந்த சில தினங்களாக தொடர்ந்துவரும் இந்த பயிற்சிகளில் அணியின் வீரர்களின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து அணி வீரர்களுக்கு வீடியோக்கள் மூலம் பல்வேறு செய்திகளை தெரிவித்து வருகிறார். அவரது செயல்பாடுகள் இந்த முறையை கோப்பையை வெல்லும் தீவிரத்தை எதிரொலித்து வருகிறது.
தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆரம்பத்தில் வீரர்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்பட்டாலும் ஆலோசனைகளை மேற்கொண்டு அதை குறைத்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் வீரர்களின் பயிற்சியில் தீவிரம் காணப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். வெறுமனே இரண்டரை மணிநேரங்கள் பயிற்சி செய்துவிட்டு சோர்வடைவதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வீடியோவில் விராட் கோரிக்கை
பயிற்சி ஆட்டங்களில் ஈடுபடும் வீரர்கள் மிகுந்த செயல்திறனுடன் அதை மேற்கொள்ள வேண்டும் என்றும் விராட் அந்த வீடியோவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோவை ஆர்சிபி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பயிற்சி ஆட்டங்கள் குறித்து அணியின் பௌலர் நவ்தீப் சைனியும் உற்சாகம் தெரிவித்துள்ளார். அணியின் மூத்த வீரர்கள் சிறப்பாக வழிகாட்டுவதாகவும் கூறியுள்ளார்.