டெல்லி: எனக்கும், விராத் கோஹ்லிக்கும் இடையே காதல் இருப்பது உண்மைதான். ஆனால் அதுகுறித்து எதுவுமே சொல்ல மாட்டேன் என்று நடிகை அனுஷ்கா சர்மா கூறியுள்ளார்.
இதன் மூலம் இருவருக்கும் இடையே காதல் இருப்பதை முதல் முறையாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார் அனுஷ்கா. ஏற்கனவே கோஹ்லி இதை பகிரங்கப்படுத்தி விட்ட நிலையில் தற்போது அனுஷ்காவும் ஒத்துக் கொண்டு விட்டார். அதேசமயம், இதுகுறித்து தான் எதுவும் பேசப் போவதில்லை, சொல்லப் போவதில்லை என்றும் அனுஷ்கா கூறியுள்ளார்.
கோஹ்லியுடனான தனது காதல் குறித்து அனுஷ்கா கூறுகையில், கோஹ்லியுடன் எனக்குள்ள உறவு குறித்து நான் எதையும் மறைக்கப் போவதில்லை. ஆனால் எதையும் நான் சொல்லப் போவதும் இல்லை.
எங்கள் உறவு இயல்பானது. அதில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். மற்றவர்கள் பேசும் விஷயம் அல்ல இது. பேசுவதையும் நாங்கள் விரும்பவில்லை. இது பொழுது போக்குச் செய்தியும் அல்ல என்று கூறியுள்ளார் அனுஷ்கா சர்மா.
அனுஷ்கா தற்போது ஆமிர்கானுடன் இணைந்து நடித்துள்ள பிகே படத்தின் புரமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.