
டிஆர்எஸ் வில்லன்
ஆனால், டிஆர்எஸ் என்னும் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் நடைமுறை சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, நடுவருக்கு சந்தேகம் வந்தால் மூன்றாவது நடுவரை அணுகுவதை போல, வீரர்களுக்கு நடுவர் முடிவின் மீது சந்தேகம் இருந்தால் டிஆர்எஸ் கேட்கலாம்.

இந்திய வாரியம் எதிர்ப்பு
இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் எதிர்ப்பால் இந்தியா விளையாடும் போட்டிகளில் டிஆர்எஸ் நடைமுறை பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் உலக கோப்பை போன்ற ஐசிசியின் பெரிய நிகழ்வுகளின்போது டிஆர்எஸ் நடைமுறை பயன்பாட்டிலுள்ளது.

வரைமுறையுடன் கூடிய அப்பீல்
எல்பிடபிள்யூ, கேட்ச் போன்ற பல்வேறு விஷயங்களில் களத்தில் உள்ள அம்பையர் முடிவு தவறாக இருப்பதாக உணரும்பட்சத்தில், அதை மறுபரிசீலனை செய்ய கோரிக்கைவிடுக்கும் அதிகாரம் அணி கேப்டன்களுக்கு, தரப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும் எண்ணிக்கை வரைமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வு நடப்பது இப்படித்தான்..
இவ்வாறு மறு பரிசீலனை செய்யும்போது, எல்பிடபிள்யூவிற்கான அப்பீல் என்றால் பந்து பிட்ச் ஆன இடம், அது எழும்பி சென்ற உயரம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, அந்த பந்து ஸ்டம்பில் படவாய்ப்பிருந்ததா, இல்லையா என்பதை கணித்து, மூன்றாம் நடுவர் முடிவை அறிவிப்பார். கேட்சுக்கான அப்பீல் என்றால், பந்து பேட்டில் பட்டதா, இல்லையா என்பதை ஸ்னிக்கோ மீட்டர் உதவியுடன் கண்டுபிடித்து முடிவை அறிவிப்பார்.

அது என்ன அம்பயர் கால்..
ஆனால், இதில்தான் ஒரு சிக்கல்,. இந்த டிஆர்எஸ் முறையில், 'அம்பயர் கால்' என்ற ஒரு வாய்ப்பும் தரப்பட்டுள்ளது. நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்ய ஒரு அணி கோரும்போது, களத்தில் உள்ள நடுவரே மீண்டும் அவரது முடிவை மறுபரிசீலனை செய்துகொள்ளலாம் என்பது இதன் பொருள். ஆனால் பெரும்பாலான நடுவர்கள் தாங்கள் கொடுத்த முடிவில் உறுதியாகவே இருப்பார்கள் என்பதால் டிஆர்எஸ் முறையிருந்தும் அதனால் பயனில்லாமல் போய்விடுகிறது. கண்களாலும், காதுகளாலும் தெளிவாக உணர முடியாததை தொழில்நுட்ப உதவியுடன் தெரிந்துகொள்ளத்தான் டிஆர்எஸ் உள்ளது. ஆனால் கள நடுவரையே மீண்டும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மூன்றாவது நடுவர் கூறுவது சரியான முறையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டக் அவுட் ஆக வேண்டிய கெயில்
இந்த சர்ச்சை வெடிக்க அடுத்தடுத்த நாட்களில் நடந்த இரு தவறுகள் காரணமாக அமைந்துவிட்டன. கடந்த செவ்வாய்க்கிழமை ஜிம்பாப்வே-மே.இ.தீவுகள் இடையே நடந்த போட்டியின்போது, கிறிஸ்கெயில் 215 ரன்களை குவித்து சாதனை படைத்தார். ஆனால் அந்த போட்டியில் அவர் முதல் பந்திலேயே டக்-அவுட் ஆக வேண்டியவர் என்றால் நம்ப முடிகிறதா.. இங்குதான் டிஆர்எஸ் தவறு இழைத்தது.

போட்டியை புரட்டி போட்டது
கிறிஸ் கெயில் சந்தித்த முதல் பந்தை ஜிம்பாப்வேயின் தினாஷே பன்யங்காரா வீசினார். அந்த பந்து கெயில் காலில் பட்டதால் எல்பிடபிள்யூ அப்பீல் செய்யப்பட்டது. கள நடுவர் ஸ்டீவ் டேவிஸ் (ஆஸ்திரேலியா) அதை அவுட் இல்லை என்றார். எனவே ஜிம்பாப்வே அணி சார்பில் நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்ய கோரப்பட்டது. ஆனால் மூன்றாவது நடுவர் ரன்மோரே மார்டினெஸ், இதை 'அம்பயர் கால்' முறையில் தீர்க்குமாறு கூறிவிட்டார். எனவே மீண்டும் முடிவெடுக்கும் அதிகாரம், களநடுவர் ஸ்டீவ் டேவிசுக்கே வந்தது. அவர் தனது முந்தைய முடிவு சரிதான் என்றார். அதன்பிறகு கிறிஸ் கெயில் படைத்த சாதனைகள், வரலாறு. ஆனால் டிவி ரிப்ளேயில், கிறிஸ்கெயில் எல்பிடபிள்யூ ஆனது அழகாக தெரிந்தது. அந்த ஒரு தப்பான முடிவு போட்டியின் முடிவை புரட்டி போட்டுவிட்டது.

அயர்லாந்துக்கு அதிருஷ்டம்
இதேபோல, நேற்று புதன்கிழமை அயர்லாந்து-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு நடுவே நடைபெற்ற போட்டியிலும் முக்கிய கட்டத்தில் தவறு இழைக்கப்பட்டது. எமிரேட்ஸ் அணி 278 ரன்களை குவித்திருந்த நிலையில், 2வது பேட்டிங் செய்த அயர்லாந்து கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. ஒரு கட்டத்தில் அரை சதம் கடந்து சிறப்பாக ஆடிவந்த அயர்லாந்தின் கேரி வில்சன் காலில் பந்து படவே, எல்பிடபிள்யூ அப்பீல் செய்யப்பட்டது. கள நடுவர் அவுட் தர மறுக்க, முடிவை மறுபரிசீலனை செய்ய கேட்டது, எமிரேட்ஸ் அணி. ஆனால் மூன்றாம் நடுவரோ, 'அம்பயர் கால்' முறையில் பரிசீலனை செய்ய களநடுவரை கேட்டுக் கொண்டார். ஆனால் களநடுவரோ தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார். கேரி வில்சன் எடுத்த 80 ரன்கள் அயர்லாந்து வெற்றிக்கு காரணமாயிற்று.

எதிர்ப்பு வலுக்கிறது
டிவி ரிப்ளேயிலோ, கேரி வில்சனின் பின்னங்காலில் பந்து பட்டு நடு ஸ்டம்பை பதம் பார்க்க வாய்ப்பு இருந்தது அழகாக தெரிந்தது. எனவே டிஆர்எஸ் முறையை கேலிக் கூத்தாக்கும், 'அம்பயர் கால்' நடைமுறையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. முழுக்க தொழில்நுட்ப உதவியுடனேயே டிஆர்எஸ் நடைமுறை இருக்க வேண்டும் என்று முன்னணி வீரர்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











