இங்கிலாந்துக்கு டெஸ்ட் தொடர்
இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட். 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு இன்னும் 42 நாட்கள் கால இடைவெளி உள்ளதால், இந்திய வீரர்கள் இங்கிலாந்திலேயே தான் தங்கியிருக்க போகிறார்கள்.
பிசிசிஐ முடிவு
இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வியை மனதில் வைத்து பிசிசிஐ முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது இங்கிலாந்து தொடருக்கு 6 வார கால இடைவெளி உள்ளதால் அதற்கு முன்னதாக அந்நாட்டு 'ஏ' அணியுடன் பயிற்சி ஆட்டங்கள் நடத்த ஆலோசித்து வருகிறது. இதற்காக பிசிசிஐ அதிகாரிகள் இங்கிலாந்து வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், மிகுந்த பாதுகாப்புகளுடன் 2 டெஸ்ட் பயிற்சி ஆட்டங்கள் நடத்தலாம் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
எந்தவொரு முக்கிய தொடருக்கும் முன்னதாக, எதிர்நாட்டு 'ஏ' அணியுடன் பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும். ஆனால் கொரோனா காரணமாக அவை தற்போது நடைபெறுவது இல்லை. மிகப்பெரும் போட்டியாக கருதப்பட்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாகவும் இந்திய அணிக்கு பயிற்சி ஆட்டம் எதுவும் ஏற்பாடு செய்யவில்லை. இண்ட்ரா ஸ்குவாட் போட்டி மட்டுமே நடைபெற்றது. இதுவும் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
விராட் கோலியின் குற்றச்சாட்டு
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்வி குறித்து விளக்கம் அளித்திருந்த விராட் கோலி, நாங்கள் இங்கிலாந்து வந்தவுடனேயே முதல் தர பயிற்சி ஆட்டம் வேண்டும் என கோரியிருந்தோம். நானும் அதற்கு ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால் பயிற்சி ஆட்டங்கள் ஏற்பாடு செய்து தரப்படவில்லை. அதற்கான காரணமும் என்னிடம் தெரிவிக்கப்படவில்லை என பிசிசிஐ-யை குறை கூறியிருந்தார். இதன் காரணமாகவே தற்போது பயிற்சி ஆட்டம் குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.