ஆஸி தொடரில் புதிய பயிற்சியாளர்
தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடர் இடைவெளி இல்லாமல் தொடங்க உள்ளதால், அடுத்து ஆஸ்திரேலியா தொடருக்கு முன் இந்திய அணியில் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே 3 உதவியாளர்கள்
ஏற்கனவே, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக பாரத் அருண் ஆகியோர் உள்ளனர்.
எல்லாத்துக்கும் சுழல் தான் காரணம்
இங்கிலாந்து தோல்வி பற்றி பிசிசிஐயில் விவாதித்த போது, இந்திய அணி சுழற்பந்துவீச்சில் தான் பின்தங்கி உள்ளது. எனவே, அதை முன்னேற்றவும், இங்கிலாந்தில் சுழற்பந்துவீச்சை சமாளிக்க சிரமப்பட்ட இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி பயிற்சி அளிக்கவும் ஒரு சுழற்பந்துவீச்சு பயிற்சியாளரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த நியமனம் ஆஸ்திரேலிய தொடருக்கு முன் நவம்பரில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
ரவி சாஸ்திரிக்கு என்ன வேலை?
ஏற்கனவே, தலைமை பயிற்சியாளர் என்ன வேலை செய்கிறார்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவருக்கு ஏற்கனவே, மூன்று உதவி பயிற்சியாளர்கள் இருந்தும் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் சொதப்பிய நிலையில், "எல்லாத்துக்கும் அந்த சுழல் தான் காரணம்" என புது கண்டுபிடிப்புடன் மற்றொரு உதவி பயிற்சியாளரை நோக்கி பிசிசிஐ ஓடுவது வேடிக்கையாக உள்ளது. இத்தனை உதவி பயிற்சியாளர்கள் இருக்கும் நிலையில், ரவி சாஸ்திரி என்ன தான் வேலை செய்வார்?