
பெங்களூரு: சிஎஸ்கே மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் போட்டிக்கு வரும் சிஎஸ்கே ரசிகர்கள், கொடிகள், பதாகைகள், தொப்பிகள் உள்ளிட்டவற்றை எடுத்து வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், சிஎஸ்கே மற்றும் பெங்களூரு அணியும் மோதும் ஆட்டம், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டிக்காக ரசிகர்கள் மைதானத்துக்கு குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், மைதானத்துக்கு வரும் ரசிகர்கள், கொடிகள், பதாகைகள் உள்ளிட்ட பொருட்களை உள்ளே கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான பிரச்னை தொடர்பாக தமிழகத்தில் போராட்டங்கள் நடந்தன. அப்போது, இம்மாதம் 10ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களில் ஈடுபட்டன.
அந்தப் போட்டியின்போது, ரசிகர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மிகுந்த சிரமத்துக்கு இடையே அந்தப் போட்டி நடந்தது. இதனிடையில் போராட்டங்கள் காரணமாக சென்னையில் நடைபெறுவதாக இருந்த சிஎஸ்கேவின் அனைத்து ஆட்டங்களும் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெங்களூருவில் இன்று போட்டி நடைபெறுகிறது. காவிரி பிரச்னையில் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பிரச்னை உள்ளது. அதனால், இந்தப்
போட்டியின்போது, எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காக, பெங்களூரு மைதானத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மைதானத்துக்குள் வரும் ரசிகர்கள், குறிப்பாக சிஎஸ்கே ரசிகர்கள், சிஎஸ்கே சின்னம் போட்டி கொடி, தொப்பி, பதாகைகள் போன்றவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை என பல ரசிகர்கள் டுவிட் செய்து வருகின்றன்றனர்.