மும்பை: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் கடந்த 10 ஆண்டுகளில் பரபரப்பின் உச்சத்தை எட்டி உள்ளது. அதற்கு காரணம், இரண்டு அணிகளும் என்ன நடந்தாலும் வெற்றி பெற வேண்டும் என களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவது தான். இதில் ஆஸ்திரேலியா சில "தில்லுமுல்லு" வேலைகளையும் செய்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் தான் 2018 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது நடந்தது.
அப்போது பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் இடையே இந்திய வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா மற்றும் சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா இடையே மோதல் வெடித்தது. இஷாந்த் ஷர்மா இயல்பிலேயே எளிதாக கோபம் கொள்ளக் கூடியவர். அவர் ரவீந்திர ஜடேஜாவை திட்டி விட்டார். அதனால் கோபமடைந்த ரவீந்திர ஜடேஜா ஆடுகளத்திலேயே இஷாந்த் ஷர்மா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இருவரும் இந்தியில் மோசமான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டி கொண்டனர். இந்த மோதல் அந்த ஒரு நாளுடன் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், ஆடுகளத்தில் நடந்த இந்த விவகாரத்தை போட்டியை ஒளிபரப்பிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய நிறுவனமான சேனல் 7 ஊதிப் பெரிதாக்க முடிவு செய்தது.
அதனால், இஷாந்த் சர்மா மற்றும் ஜடேஜா வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது ஸ்டம்ப் மைக்கில் சத்தத்தை அதிகரித்து அவர்கள் என்ன பேசுகிறார்கள்? என்பதை நேரலையில் ஒளிபரப்பினார்கள். மேலும், அதன் முழு வீடியோவை ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கும் அவர்கள் பரப்பினார்கள். பொதுவாக எந்த ஒரு தொலைக்காட்சியும் இதுபோல செய்ய மாட்டார்கள். ஆனால், இந்த சம்பவத்தை வைத்து இந்திய அணிக்கு எதிராக ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முடிவு செய்த அந்த தொலைக்காட்சி அந்த வீடியோவை ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு அளித்தது.
அப்போது அந்த தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்த ஆகாஷ் சோப்ரா அந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், அப்போது தன்னுடன் சக வர்ணனையாளராக இருந்த ரிக்கி பாண்டிங் சிறிய விஷயத்தை இவர்கள் ஊதிப் பெரிதாக்குகிறார்கள் என கூறிவிட்டு, அடுத்த சில நிமிடங்களில் நேரலையில் பேசும்போது இந்திய அணியில் ஒற்றுமை இல்லை என கடுமையாக விமர்சித்து பேசியதையும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
ரிக்கி பாண்டிங் சில நிமிடங்களிலேயே பச்சோந்தியாக மாறியதையும், அதனால் ஆஸ்திரேலியாவில் நாம் விளையாடும் போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் ஆட வில்லை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மற்றும் ஊடகங்களுக்கு எதிராகவும் விளையாடுகிறோம் என்பதை புரிந்து கொண்டதாக ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், "அவர்கள் என் முன்னிலையில் இஷாந்த் ஷர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோவை ஊடகங்களுக்கு வெளியிட்டார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதை ஸ்டம்ப் மைக்கின் சத்தத்தை அதிகப்படுத்தி ஊடகங்களுக்கு வெளியிட்டார்கள். அதன் பின் நாங்கள் அதைப் பற்றி, "இவர்கள் எதற்காக இதை செய்கிறார்கள்? இது ஒரு விஷயமே இல்லை." என்று பேசிக் கொண்டிருந்தோம்."
"அப்போது ரிக்கி பாண்டிங் என் அருகில் இருந்தார். அவர், "ஒரு சிறிய மருவை மலையாக காட்டுகிறார்கள்" என்று சொன்னார். அடுத்த சில நிமிடங்களில் அவர் நேரலையில் வந்த போது இந்திய அணியை கடுமையாக விமர்சனம் செய்தார். அதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். சில நிமிடங்கள் முன்புதான் இவர் வேறு ஒருவராக இருந்தார் என்று நினைத்தேன்."
"சேனல் 7 என்னை அழைத்து இந்தியா சார்பாக பேச சொன்னது. நான் அப்போது, "எந்த அணியிலும் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இருக்காது" என்றேன். அடுத்த நாள் இந்தியா அந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது. நான் மறுநாள் செய்தித்தாளை எடுத்துப் பார்த்த போது முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக இந்திய அணியில் விரிசல் ஏற்பட்டதாக எழுதப்பட்டிருந்தது. அப்போது நான் ஒரு விஷயத்தை புரிந்து கொண்டேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் போது வர்ணனையில் நாம் நடுநிலையாக இருக்கக் கூடாது. இந்திய அணியின் தேசிய கொடி தான் முக்கியம் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்." என்று ஆகாஷ் சோப்ரா கூறினார்.