இந்திய ப்ளேயிங் 11
கடைசியாக கடந்த 2007ஆம் ஆண்டு தோனி தலைமையில் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, அதன்பின்னர் 15 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல காத்துக்கொண்டுள்ளது. அந்தவகையில் ரோகித் சர்மா தலைமையில் இந்தாண்டு பேட்டிங்கில் அசுர பலத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்த முறை இந்திய அணியில் மிக முக்கியமான இணைப்பாக சேர்ந்திருப்பவர் தினேஷ் கார்த்திக் தான்.
அசத்தல் ஆட்டம்
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியும் கழட்டிவிட்ட பின்னர், வர்ணனையாளர் பணியை ஏற்ற அவர், திடீரென டாப் கியரில் பயணித்து வருகிறார். இந்த டி20 உலகக்கோப்பையில் இடம்பிடிப்பேன் என உறுதி எடுத்துக்கொண்டது போலவே ஐபிஎல் தொடரில் கெத்து காட்டி இந்திய அணிக்குள் வந்தார். அதுவும் இந்தியாவின் எதிர்காலம் என பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட்-க்கு மாற்றாக ப்ளேயிங் 11ல் சேர்க்கப்படுகிறார்.
ரிக்கிப்பாண்டிங் பேச்சு
இந்நிலையில் இதனை பார்த்து ரிக்கிப்பாண்டிங் ஆச்சரியப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கொல்கத்தா அணியால் கூட தக்கவைக்கப்படாத தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கை அத்துடன் முடிந்தது என நினைத்தேன். ஆனால் தற்போது உலகின் பெஸ்ட் ஃபினிஷராக உருவெடுத்துள்ளார். இதனை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் அவரின் கிரிக்கெட் நேரங்கள் முடிந்துவிட்டன.
சாதாரணமே அல்ல
இந்த வயதில் தினேஷ் கார்த்திக் இப்படி மாற்றத்தை தனக்குள் கொண்டு வந்தது சாதாரணமான காரியம் அல்ல. இந்திய வீரர்கள் அனைவரிடமும் நான் பார்த்து வியக்கும் விஷயம் அந்த விடா முயற்சி தான். என்ன ஆனாலும் கடைசி வரை பிடிவாதமாக இருக்கின்றனர். அவர் இல்லாமல் இந்தியா விளையாடாது என்ற சூழலை தினேஷ் உருவாக்கியது பிரமிப்பாக உள்ளது என ரிக்கிப்பாண்டிங் கூறியுள்ளார்.