துபாய்: இந்திய அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். அணிக்கு மிகவும் தேவைப்படும் நெருக்கடியான தருணங்களில், கில்லுக்குள் இருக்கும் உண்மையான "புல்டாக்" (Bull dog) வெளிப்படுகிறார் என்று அவர் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வெற்றிகரமாகத் தலைமை தாங்கிய அனுபவத்துடன், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்றார். 26 வயதான சுப்மன் கில், அந்தத் தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியதுடன், பேட்டிங்கிலும் முத்திரை பதித்தார். ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, நான்கு சதங்கள் உட்பட 754 ரன்கள் குவித்து, தொடரை 2-2 என சமன் செய்ய முக்கியக் காரணமாக விளங்கினார்.
டெஸ்ட் அணியைத் தொடர்ந்து, ரோஹித் சர்மாவுக்குப் பிறகு ஒருநாள் அணியின் கேப்டனாகவும் கில் நியமிக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இந்திய அணிக்குச் சாதகமாக அமையாவிட்டாலும், ஒரு கேப்டனாக சுப்மன் கில் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஐசிசியின் 'தி ஐசிசி ரிவியூ' நிகழ்ச்சியில் பேசிய ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து தொடரில் கில்லின் கேப்டன்சி அணுகுமுறையைப் பாராட்டினார். அவர் கூறியதாவது: "உண்மையில், இங்கிலாந்தில் அந்த பலம் வாய்ந்த அணிக்கு எதிராக கில் இந்திய அணியை வழிநடத்திய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சில தருணங்களில், அவர் தனது இயல்பான குணத்திலிருந்து சற்று மாறுபட்டுச் செயல்பட்டார்."
"ஆனால், அணி மீது தனது முத்திரையைப் பதிக்கவும், வீரர்களுக்காக உறுதியாக நிற்கவும் அவர் செய்ய வேண்டியதைச் செய்தார். மான்செஸ்டரில் களத்தை விட்டு வெளியேறாமல் இருந்தது போன்ற சில சிறிய விஷயங்கள் மூலம், அவர் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தினார். மிக விரைவாக அணி மீது தனது அதிகாரத்தை நிலைநாட்டினார். பேட்டிங்கிலும் முன்னின்று வழிநடத்தினார்" என்று பாண்டிங் குறிப்பிட்டார்.
பொதுவாக களத்தில் மிகவும் அமைதியாகக் காணப்படும் சுப்மன் கில், இங்கிலாந்து தொடரின் போது தனது ஆக்ரோஷமான மறுபக்கத்தைக் காட்டினார். இது தன்னை மிகவும் கவர்ந்ததாக பாண்டிங் கூறியுள்ளார்.
"ஒரு முக்கியமான தருணம் வரும்போது, ஒரு எல்லையை வகுக்க வேண்டிய சூழல் ஏற்படும்போது, அவர் அதைச் செய்தார். இது எப்போதும் அவரது இயல்பான குணமாக இருந்ததில்லை. அவர் பொதுவாக களத்தில் அமைதியாகவும், நிதானமாகவும் இருக்கக்கூடியவர். ஆனால், அணிக்கு மிகவும் தேவைப்பட்ட நேரத்தில், அவருக்குள் இருந்த அந்த உண்மையான சண்டை போடும் 'புல்டாக்' குணம் வெளிப்பட்டது. ஒரு நாட்டிற்காக விளையாடும் எந்தவொரு வீரரிடமிருந்தும் நான் இதையே பார்க்க விரும்புகிறேன்," என்று பாண்டிங் புகழாரம் சூட்டினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும், கேப்டன் சுப்மன் கில் மீது ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான்கள் வைத்துள்ள நம்பிக்கை, இந்திய அணிக்கு உத்வேகம் அளித்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 23-ம் தேதி நடைபெறவுள்ளது.