லாகூர்: பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாமின் பேட்டிங் திறன் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கேள்வி எழுப்பியுள்ளார். டி20 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்திற்குப் பிறகு, அணியின் செயல்திறனை மேம்படுத்த. பாபர் அசாம் தனது பேட்டிகை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பாபரின் டி20 ஃபார்ம் தற்போது கவலைக்குரியதாக உள்ளது. முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், பாபர் அசாம் பந்தை அடிக்கும் போது பவரைக் குறைத்துக்கொண்டது போல் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்திற்குப் பிறகு, பாபர் அசாம் பயன்படுத்தப்படும் விதத்தை அணி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாண்டிங் பரிந்துரைத்தார்.

ஒரு முன்னணி பேட்ஸ்மேனின் மெதுவான தொடக்கம் அணியின் மற்ற வீரர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார். ரவி சாஸ்திரி மற்றும் சஞ்சனா கணேசன் ஆகியோருடன் 'தி ஐசிசி ரிவியூ' நிகழ்ச்சியில் பாண்டிங் பேசுகையில், "அவர் தனது சக்தியையும், பந்தை அடிக்கும் திறனையும் இழந்தது போல் தெரிகிறது. ஒரு சுழற்பந்து வீச்சாளரை அவர் எதிர்கொண்ட விதத்தையும், பந்தை பவுண்டரியை கடக்க முடியாமல் போனதையும் பாருங்கள்," என்றார்.
"நீங்கள் 18 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தால், நீங்கள் உங்களுக்கே அழுத்தம் கொடுப்பதில்லை, மறுமுனையில் உள்ள வீரருக்கும் அழுத்தம் கொடுக்கிறீர்கள். பவுண்டரிகளை அடித்தே ஆகவேண்டும் என்பதை மறுமுனையில் உள்ள வீரர் அறிவார்," என்று பாண்டிங் விளக்கினார்.
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாண்டிங், தனது நிலைப்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டதை வெளிப்படுத்தினார். தொடக்கத்தில் பாபருக்கு ஆதரவாக இருந்ததாகவும், ஆனால் நெதர்லாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்திற்குப் பிறகு தனது பார்வையை மறுபரிசீலனை செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
"போட்டியின் தொடக்கத்தில் பெரிய பெயர் கொண்ட அனுபவமிக்க வீரர்கள் அவசியம் என நான் அவரை ஆதரித்தேன். ஆனால் இந்தத் தொடரில் பாகிஸ்தான் முன்னேற வேண்டுமானால், பாபர் அசாமின் சிறந்த ஃபார்ம் அவர்களுக்குத் தேவை," என்றார்.