ஆஸ்திரேலியாவின் சிறந்த கேப்டன்
ஆஸ்திரேலியாவின் சிறந்த கேப்டன் என்றால் நிச்சயம் அந்த வரிசையில் ரிக்கி பாண்டிங் இருப்பார். 77 டெஸ்ட் போட்டிகளில் 48 வெற்றிகள், 228 ஒருநாள் போட்டிகளில் 165 வெற்றிகளை பெற்றுக் கொடுத்த சிறந்த கேப்டனான பாண்டிங்கையும் தடுமாற வைத்தது அந்த 2008 மங்கிகேட் சர்ச்சை.
2008 சர்ச்சை
2008ஆம் ஆண்டு இந்திய அணி, ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. சிட்னியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஹர்பஜன் சிங், சைமண்ட்ஸ்-ஐ இன ரீதியாக திட்டியதாக சர்ச்சை வெடித்தது.
என்ன நடந்தது?
பொதுவாக ஆஸ்திரேலிய வீரர்கள் களத்தில், சீண்டிக் கொண்டே இருப்பார்கள். அந்த தொடரில் அப்படித் தான் நடந்தது. இந்திய அணி அந்த சீண்டல்களுக்கு பதிலடி கொடுத்தது. ஹர்பஜன் சிங், சைமைண்ட்ஸ்-இடம் முறைத்துக் கொண்டே திட்டினார். அப்போது "குரங்கு (Monkey)" என ஹர்பஜன் திட்டியதாக, சைமண்ட்ஸ் புகார் கூறினார்.
என் கட்டுப்பாட்டில் இல்லை
இது குறித்து நினைவு கூர்ந்த ரிக்கி பாண்டிங், அந்த சர்ச்சை தான் என் கேப்டன்சியில் நடந்த மோசமான நிகழ்வு. 2005 ஆஷஸ் டெஸ்ட் தொடர் இழப்பும் மோசம் தான் என்றாலும், அப்போது அனைத்தும் என் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், இந்த சர்ச்சையில் எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை என்றார்.
அடிலெய்டு டெஸ்ட்
மேலும், அடுத்த டெஸ்ட் போட்டியின் இடையே இந்த சர்ச்சை தொடர்பான விசாரணை நடந்தது. அதனால், அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் இடையே தான் களத்தை விட்டு சென்று, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அதிகாரிகளுடன் நீண்ட நேரம் பேசியதாக குறிப்பிட்டார்.
இந்தியா எதிர்ப்பு
அந்த சர்ச்சையின் போது, ஹர்பஜன் சிங் மீது கடும் புகார் எழுந்தது. ஆஸ்திரேலிய ஊடகங்கள் அவரை கடுமையாக திட்டி வந்தன. இந்த நிலையில், அம்பயரின் தவறான தீர்ப்புகள் வேறு அதிர்ச்சி அளிக்க, இந்திய அணி தொடரை புறக்கணிக்க உள்ளதாக கூறியது.
அடுத்த டெஸ்டில் பாதிப்பு
மேலும், அடுத்த டெஸ்டில் இது ஆஸ்திரேலிய அணியை பாதித்ததாக கூறினார் பாண்டிங். தாங்கள் கிரிக்கெட் விளையாடும் விதத்தில் இந்த சர்ச்சை பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், அடுத்த பெர்த் டெஸ்ட் போட்டி மிக மோசமாக அமைந்ததாகவும் கூறினார்.
அடுத்த நாட்களில் மோசமானது
பெர்த் டெஸ்ட் போட்டியில் தாங்கள் வெல்வோம் என நினைத்து களமிறங்கிய நிலையில், அந்தப் போட்டியில் தோற்றோம். அடுத்த நாட்களில் எங்கள் நிலைமை மேலும், மேலும் மோசமானது என்று பழைய நினைவுகளை குறிப்பிட்டார் ரிக்கி பாண்டிங்.
ஹர்பஜன் தப்பினார்
ஐசிசி தலையிட்டு இந்த சர்ச்சையை விசாரணை செய்ததை அடுத்து, இந்தியா அப்போது அமைதியானது. விசாரணை முடிவில் ஹர்பஜன் சிங் மீதான புகார் நிரூபணம் ஆகவில்லை. அந்த விசாரணைக்கு சாட்சி சொல்ல சச்சின் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சைமண்ட்ஸ் சரிவு
ஆனால், அந்த சர்ச்சை துரதிர்ஷ்டவசமாக ஆஸ்திரேலியாவின் சிறந்த ஆல் - ரவுண்டராக வலம் வந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கிரிக்கெட் வாழ்வை புரட்டிப் போட்டது. அத்துடன் அவர் பார்ம் இழந்து ஆஸ்திரேலிய அணியில் தன் இடத்தையும் இழந்தார்.