காலே : இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் பத்தாயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மைல்கல்லை எட்டிய 15 வது வீரர் மற்றும் நான்காவது ஆஸ்திரேலிய வீரர் என்று பெருமையும் அவர் பெற்றிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 35 சதத்தை அவர் பூர்த்தி செய்து இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்,"ஸ்மித் தான் இந்த தலைமுறையின் சிறந்த வீரர் என்று விவாதம் தற்போது எழுந்துள்ளது".

"இதை எதிர்த்து உங்களால் விவாதிக்கவே முடியாது. தற்போது ஜோ ரூட் மற்றொரு சிறந்த வீரராக இருக்கின்றார். வில்லியம்சனின் ரெக்கார்டுகளும் அபாரமாக இருக்கின்றது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடிய விதம் அவரை வேறொரு கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. ஐந்து, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சிறந்த நான்கு வீரர்கள் என்று கூறினால் அதில் விராட் கோலி ஒருவராக இருப்பார்".
"ஆனால் ஜோ ரூட் அந்த பட்டியலில் கடைசியில் தான் இருந்திருப்பார். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் ஜோ ரூட் 19 சதங்களை அடித்திருக்கிறார். மற்ற வீரர்கள் யாரும் அவ்வளவு சதம் அடித்தது கிடையாது. நீங்கள் ஒரு இங்கிலாந்து நாட்டினரை பார்த்து சிறந்த வீரர் யார் என்று கேட்டால் ஜோரூட் என்று சொல்வார்கள். ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவரிடம் கேட்டால் ஸ்மித் பெயரை சொல்வார்கள்".
"நியூசிலாந்து நாட்டினரை கேட்டால் வில்லியம்சன் என்று சொல்வார்கள். எனவே இந்த விவாதம் கொஞ்சம் கடுமையாக தான் இருக்கும். ஆனால் ஸ்மித் செய்த சாதனையை ஒப்பிட்டு அவருக்கு எதிராக பேசுவது என்பது நிச்சயம் கடினமாக தான் இருக்கும்" என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று சதம் மட்டும் தான் அடித்திருக்கிறார். அப்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 30 சதம் அடித்துள்ளார். இதன் காரணமாக விராட் கோலியின் பெயரை சேர்க்காமல் ரிக்கி பாண்டிங் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.