சென்னை : தமிழ்நாட்டுக்கும் தோனிக்கும் எவ்வளவு பெரிய உறவு இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். தமிழகத்தின் தத்துப் பிள்ளையாகவே தோனி மாறி வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தோனி பிறந்து வளர்ந்தது ஜார்கண்டாக இருந்தாலும், தமிழ்நாட்டில் அவருடைய கொடி தான் கிரிக்கெட் உலகில் பறந்து வருகிறது. இந்த நிலையில் தோனியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அவமானப்படுத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் தற்போது சிஎஸ்கே அணியின் தொடர்புடைய நிர்வாகிகள் இல்லை என்றாலும் சீனிவாசன் கண் அசைத்தால் தான் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தில் எல்லாமுமே நடக்கும். இந்த நிலையில் தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடத்தப்பட உள்ளது. இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒரு காலத்தில் இந்த தொடர் பாரம்பரியமிக்க போட்டியாக நடத்தப்படுவதுண்டு. இந்த தொடரில் பங்கேற்பதற்காக அண்டை நாடான இலங்கையில் இருந்து கூட வீரர்கள் வருவார்கள்.
இதனால் இந்த தொடரை 8 அணியில் இருந்து 12 அணிகள் பங்கேற்கும் தொடராக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அண்மையில் மாற்றியது. இதனை அறிந்து கொண்ட தோனி ரஞ்சி கிரிக்கெட்டுக்கு முன்பு இந்த தொடரில் ஜார்க்கண்ட் அணி பங்கேற்றால் அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்று இந்த தொடரில் சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்து இருக்கிறார்.

ஆனால் தோனியின் சிபாரிசை நிராகரித்துள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்கனவே பன்னிரண்டு அணிகளை தாங்கள் தேர்வு செய்து விட்டதாகவும், இதனால் ஜார்கண்டனையை சேர்த்துக் கொள்ள எங்களுக்கு இடமில்லை என்றும் முகத்தில் அடித்தது போல் கூறிவிட்டார்கள்.சட்டீஸ்கர், சர்வீஸ் போன்ற அணிகளே இந்த தொடரில் பங்கேற்க முடியாமல் நிற்கும் போது ஜார்கண்ட் அணியை எல்லாம் சேர்க்க முடியாது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத தோனி வருத்தத்தில் உள்ளாராம். சீனிவாசனுக்கும் தோனிக்கும் ஏதேனும் பிரச்சனையா? இல்லை சீனிவாசனுக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கும் ஏதேனும் பிரச்சனையா என்பது தெரியவில்லை என ரசிகர்களும் யோசித்து வருகிறார்கள்.