பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, விராட் கோலியின் கேப்டன்சி குறித்து தான் தெரிவித்த ஒரு சில கருத்துகளால், அவருடனான தனது நட்புறவில் விரிசல் ஏற்பட்டது என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். ஒரு விஷயத்தை பொதுவெளியில் பேசுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்டவரிடம் தனிப்பட்ட முறையில் பேசியிருக்க வேண்டும் என்ற பாடத்தை இந்தச் சம்பவம் எனக்குக் கற்றுக் கொடுத்தது என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராபின் உத்தப்பா, 2019 உலகக் கோப்பை அணியில் அம்பத்தி ராயுடு சேர்க்கப்படாதது மற்றும் யுவராஜ் சிங்கிற்கு முறையான வழியனுப்பு விழா அளிக்கப்படாதது போன்ற விஷயங்களில், அப்போதைய கேப்டன் விராட் கோலியின் செயல்பாடுகளை விமர்சித்திருந்தார். ராயுடு போன்ற ஒரு வீரரை கையாண்ட விதம் சரியல்ல என்று அவர் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

அந்தப் பேட்டிக்குப் பிறகு, கோலியுடனான தனது நட்பில் ஒருவித மனக்கசப்பு ஏற்பட்டதை உணர்ந்ததாக உத்தப்பா கூறியுள்ளார். இதுகுறித்து தற்போது தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள அவர், "அந்தப் பேட்டி என்னைப் பற்றியதுதானே தவிர, விராட் கோலியைப் பற்றியது அல்ல. ஆனால், நான் கூறிய கருத்துகள், விராட் உடனான எனது நட்புறவில் பாதிப்பை ஏற்படுத்தியது. நான் நம்பும் ஒரு கருத்தாக இருந்தாலும், அதை பொதுவெளியில் கூறுவதற்கு முன்பு, அவரிடம் தனிப்பட்ட முறையில் நான் பேசியிருக்க வேண்டும் என்பதை இப்போது உணர்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "நான் விராட் கோலியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. எனது நெருங்கிய நண்பரான அம்பத்தி ராயுடு, அவரது தலைமையின் கீழ் எப்படி நடத்தப்பட்டார் என்பதைப் பற்றித்தான் பேசினேன். ஒவ்வொருவருக்கும் அவரவர் தலைமைப் பண்பு இருக்கும், அதுகுறித்து கருத்துச் சொல்லவும் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனாலும், எங்கள் நட்பைக் கருத்தில் கொண்டு, நான் அவரிடம் முதலில் பேசியிருக்க வேண்டும். இது எனக்கு ஒரு பெரிய பாடம்." என்றும் உத்தப்பா கூறியுள்ளார்.
பொதுவெளியில் சக வீரர்கள் குறித்து விமர்சிக்கும்போது, அது தனிப்பட்ட உறவுகளில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.