ஹாங்சோ : இந்தியா - நேபாள அணிகள் இடையேயான ஆசிய விளையாட்டு போட்டி டி20 போட்டியில் ரிங்கு சிங் தன் அதிரடி ஆட்டத்தை ஆடி இந்திய அணியை கரை சேர்த்தார்.
அவர் மட்டும் இல்லை என்றால் இந்திய அணி 200 ரன்களை தாண்டியே இருக்காது. ஜெய்ஸ்வால் அடித்த சதம் இந்திய அணியை 150 ரன்களை எட்ட மட்டுமே பயன்பட்டது.

அந்த அளவுக்கு மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக ஆடவில்லை. ரிங்கு சிங் ஏற்கனவே கடைசி ஓவர்களில் எதிரணிகளை மிரட்டிய சம்பவங்கள் உண்டு.
ஐபிஎல் தொடரில் கடைசி ஓவரில் வெறும் சிக்ஸாக அடித்து போட்டியை வென்று கொடுத்தவர் என்பதை யாரும் மறக்கவில்லை. அதை அவர் இந்திய அணிக்காக ஆடும் போது செயல்படுத்தி மிரட்டினார்.
19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. அதில் டி20 கிரிக்கெட் போட்டிகளும் உள்ளது. அதில் பங்கேற்க இந்திய இளம் வீரர்கள் கொண்ட கிரிக்கெட் அணி அனுப்பி வைக்கப்பட்டது.
ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான இந்திய அணி காலிறுதிப் போட்டியில் நேபாள அணியை சந்தித்தது. டாஸ் வென்ற ருதுராஜ் பேட்டிங் தேர்வு செய்தார். ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெயிக்வாட் துவக்கம் அளித்தனர்.
ருதுராஜ் ரன் சேர்க்க மிகவும் சிரமப்பட்டார். முதல் பவுண்டரி அடிக்கவே நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார். 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அவர் வெளியேறினார். ஜெய்ஸ்வால் வெறும் 22 பந்துகளில் 50 ரன்களை கடந்து தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடினார்.
ஆனால், அவருக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. திலக் வர்மா 2, ஜிதேஷ் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதற்குள் ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அப்போது சிவம் துபே ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற அளவிலேயே எடுத்து வந்தார். ஆனால், ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த உடன் களமிறங்கிய ரிங்கு சிங் 18வது ஓவரிலேயே ஒரு சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரின் முடிவில் 7 பந்துகளுக்கு 7 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.
ஆனால், 19வது ஓவரில் ரிங்கு சின் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார். இந்தியா அப்போது 19 ஓவர்களில் 177 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. எப்படியாவது இந்தியா 190 ரன்களை எட்டுமா என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
20வது ஓவரில் தானே ஸ்ட்ரைக்கில் இருக்கும்படி பார்த்துக் கொண்ட ரிங்கு சிங் 190 என்ன, 200 ரன்களையே எடுத்து விடலாம் என அசால்ட் காட்டினார். அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் 4, 6, 4 என மூன்று பவுண்டரிகளை அடித்தார்.
பின் ஐந்தாவது பந்தில் ஒரு சிக்ஸ் அடித்தார். நான்காவது மற்றும் கடைசி பந்தில் சிங்கிளாக ஓடி 4 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் மட்டும் இந்தியாவுக்கு 25 ரன்கள் கிடைத்தது. அந்த 25 ரன்களையும் அடித்தது ரிங்கு சிங் தான்.
அவர் இல்லையென்றால் இந்தியா 200 ரன்களை தாண்டி இருப்பது கடினம் தான். சிவம் துபே 19 ரன்களில் 25 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார். இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் சேர்த்து இருந்தது.
ரிங்கு சிங் 15 பந்துகளில் 2 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து 37 ரன்கள் சேர்த்து இருந்தார்.