லக்னோ: இந்திய டி20 அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங்குக்கு அரசுப் பதவி ஒன்று தேடி வந்துள்ளது. ரிங்கு சிங் சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசை எதிர்த்து அரசியல் செய்து வரும் சமாஜ்வாடி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜை நிச்சயதார்த்தம் செய்தார். இந்த ஆண்டின் இறுதிக்குள் அவர்கள் இருவரும் திருமணம் செய்வார்கள் என கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசு சார்பில் ரிங்கு சிங்குக்கு இந்தப் பதவி அளிக்கப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிங்குவிற்கு, அம்மாநில பாஜக அரசு சார்பில் மாவட்ட அடிப்படை கல்வி அதிகாரி என்ற பதவிக்கான நியமனம் வழங்கப்பட உள்ளது.

இதில் ஏதேனும் அரசியல் உள்ளதா அல்லது ரிங்கு சிங்கை கௌரவிக்கும் வகையில் இந்தப் பதவி அளிக்கப்பட்டதா என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன. ரிங்கு சிங் மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்து இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது தந்தை கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் பணியைச் செய்து வந்தார். அவர்களது குடும்பம் மிகவும் ஏழ்மையில்தான் இருந்தது. அவர் உள்ளூர் அளவில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாடி வந்தார். பிறகு அங்கிருந்து முன்னேறி உத்தரப் பிரதேச மாநில கிரிக்கெட் அணியை அடைந்தார்.
அதன் பிறகு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சிறப்பாக விளையாடினார். அதைத் தொடர்ந்து இந்திய அணியிலும் இடம் பிடித்தார். அவரது வளர்ச்சி நாடு முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை வர்க்க கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது பெரிய ஊக்கமாகவும் அமைந்தது.
"நம்மைப் போல ஒருவன் உழைத்து முன்னேறி இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருக்கிறான்" என அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பிரியா சரோஜை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டதும் பலருக்கும் மகிழ்ச்சி அளித்தது. தற்போது ரிங்கு சிங் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாவட்ட அடிப்படை கல்வி அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது ரிங்கு சிங்கின் அபாரமான வளர்ச்சியை காட்டுகிறது.