மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங்கிடம் 5 கோடி ரூபாய் கேட்டு தாவூத் இப்ராஹீமின் கும்பல் மிரட்டுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து தற்போது அதிர்ச்சிகர செய்தி வெளிவந்துள்ளது. நவீத் என்ற நபர் ரிங்கு சிங்கிடம் தாம் உங்களுடைய ரசிகர் என்று முதலில் அறிமுகமாகி இருக்கிறார்.
ஆரம்பத்தில் தமக்கு குடும்ப கஷ்டம் என்றும் அதற்காக பணம் வேண்டும் என்றும் கேட்டு இருக்கிறார். முதலில் ரசிகர் என்பதற்காக ரிங்கு சிங் பண உதவி செய்திருக்கிறார். ஆனால் இதையே பயன்படுத்திக் கொண்டு ரிங்கு சிங்கிடம் நவீத், தொடர்ந்து பணத்தை கேட்டிருக்கிறார்.

மேலும் ரிங்கு சிங்கிடம் அவர் பேசும் தொனியும் மாறி இருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் ரிங்கு சிங்கை மிரட்ட தொடங்கிய நவீத், தமக்கு பணம் வழங்கவில்லை என்றால் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தாவூத் இப்ராஹிம் கும்பலுடன் தமக்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்லி மிரட்டி இருக்கிறார்.
தற்போது இந்த மெசேஜ்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் தமக்கு ஐந்து கோடி ரூபாய் தர வேண்டும் என்றும், இடத்தையும் நேரத்தையும் நான் சொல்கின்றேன். நீங்கள் வருவதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஞாபகம் இருக்கட்டும் டி கம்பெனி என்று அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.
தாவூத் இப்ராஹிமை குறிக்கும் வகையில் இந்த பெயர் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஏப்ரல் மாதத்தில் நடந்திருக்கிறது. இது குறித்து ரிங்கு சிங் ஏற்கனவே போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் முகமது இல்சான் மற்றும் நவீத் என்ற இரண்டு பேரை வெஸ்ட் இண்டீசில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே பல மிரட்டல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. அரசியல் பிரமுகரான ஜீஸான் சித்திக் என்பவரிடம் 10 கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய வழக்கு இவர்கள் மீது உள்ளது தெரியவந்துள்ளது. இவர்களுக்கும் தாவூத் இப்ராஹிமுக்கும் தொடர்பு இருக்குமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து வேறு ஏதேனும் கிரிக்கெட் வீரர்களுக்கு இதுபோல் மிரட்டல் வந்திருக்கிறதா என்ற விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல், இது போன்ற பிரபலங்களின் பாதுகாப்பையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.