கான்பூர்: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிங்கு சிங்கின் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற பிரியா சரோஜ் தான் மணப்பெண் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
பிரியா சரோஜ் தொழில்முறையில் ஒரு வழக்கறிஞர் ஆவார். 26 வயதே ஆகும் நிலையில் அவர் சமாஜ்வாடி கட்சி சார்பில் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தின் மச்லிஷாஹர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திருமணத்திற்கு முன்பே அவர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார்.

ரிங்கு சிங் இந்திய அணிக்காக 30 டி20 போட்டிகளிலும், 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக இருக்கிறார். அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாட இருக்கிறார்.
இந்த நிலையில் தான் அவரது திருமண நிச்சயதார்த்தம் குறித்த செய்தி வெளியாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தின் அரசியல் குடும்பங்களில் ஒன்றின் வாரிசான நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜை ரிங்கு சிங் கரம்பிடிக்க உள்ளார். பிரியா சரோஜ்-இன் தந்தை டூஃபானி சரோஜ் மச்லிஷாஹர் தொகுதியில் 1999, 2004 மற்றும் 2009 நாடாளுமன்ற தேர்தல்களில் மூன்று முறை தொடர்ந்து போட்டியிட்டு வென்றார்.
இந்த நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அவரது மகள் பிரியா சரோஜ் 25 வயதில் பாஜகவின் மூத்த அரசியல் தலைவர் பிபி சரோஜை எதிர்த்து நின்று வெற்றி பெற்று இருக்கிறார். இப்படி அரசியலில் முதல் அடியிலேயே அதிரடி காட்டி இருக்கும் பிரியா சரோஜை தான் ரிங்கு சிங் திருமணம் செய்ய இருக்கிறார் என்ற தகவல் பலரையும் வியப்பிலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.
ரிங்கு சிங் மிக ஏழ்மையான பின்னணியில் இருந்து முன்னேறி கிரிக்கெட் வீரராக மாறியவர். அவரது தந்தை இப்போதும் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். தன் குடும்பத்தினருக்கு ஒரு வீட்டை கட்டிக் கொடுத்து இருக்கும் ரிங்கு சிங், சமீபத்தில் தான் அலிகாரில் தனக்கென சொந்தமாக ஒரு வீட்டை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.