மும்பை: இந்திய கிரிக்கெட் அணியிலேயே மிகவும் பாவமான வீரர்கள் என்று பட்டியலில் சஞ்சு சாம்சனுக்கு பிறகு ரிங்கு சிங் தான் நிச்சயம் இடம் பெறுவார். ஏனென்றால் இருவருக்கும் திறமை இருந்தும் இந்திய அணியில் இடமே கிடைக்காது. சஞ்சு சாம்சனுக்காவது 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கும்.
ஆனால் ரிங்கு சிங், அணியில் கூட தேர்வு செய்யப்படாமல் தான் இருந்தார். இந்த சூழலில் ஆசிய கோப்பை தொடரில் இடம் கிடைத்தது. ஆனால் இறுதிப் போட்டியில் மட்டுமே விளையாடி, வெற்றிக்கு தேவையான கடைசி ரன்களை அவர்தான் அடித்தார். அதன் பிறகு நடைபெற்ற டி20 தொடர்களில் ரிங்கு சிங் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்த தருணத்தில் டி20 உலக கோப்பையில் ரிங்கு சிங்கிற்கு இடம் கிடைத்தது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்தது. ஆனால் கில் ரசிகர்கள் சிலர், அரசியல் காரணமாகத்தான் ரிங்கு சிங்கிற்கு இடம் கிடைத்தது என்றும், இல்லையென்றால் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது என்றும் கூறுகின்றனர்.
ரிங்கு சிங்கின் மனைவியான பிரியா சரோஜ் சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் தம் திறமையை பார்த்துதான் தேர்வு குழுவினர் இடம் கொடுத்திருக்கிறார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை ரிங்கு சிங் நிரூபித்திருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் பட்டையை கிளப்பி வருகிறார்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ரிங்கு சிங் 48 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். இதனைத் தொடர்ந்து சந்திகார் அணிக்கு எதிரான இரண்டாவது லீக் ஆட்டத்தில் ரிங்கு சிங் 60 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் குவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது பரோடா அணிக்கு எதிரான மூன்றாவது லீக் ஆட்டத்தில் ரிங்கு சிங் 67 பந்துகளில் 63 ரன்கள் குவித்துள்ளார்.
உத்தர பிரதேச அணி 86 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்து தடுமாறிய போது களத்திற்கு வந்த ரிங்கு சிங் அபாரமாக விளையாடி மூன்று சிக்ஸர், இரண்டு பவுண்டரிகளை சேர்த்துள்ளார். இதன் மூலம் அணியை சரி விலிருந்து மீட்டு இருக்கின்றார். தொடர்ந்து மூன்று இன்னிங்ஸில் 50 ரன்கள் அடித்து தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். இதனால் டி20 உலக கோப்பை பிளேயிங் 11 அணிகள் ரிங்கு சிங் நடுவரிசையில் இடம் பிடிப்பாரா? இல்லை இஷான் கிசனுக்கு நடுவரிசையில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது