லக்னோ: 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், அணியின் முக்கிய வீரரான ரிங்கு சிங்கின் தந்தை காசந்திர சிங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரிங்கு சிங்கின் தந்தை காசந்திர சிங் கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அண்மையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, கிரேட்டர் நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நான்காம் கட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்கள் எவ்வவளோ போராடியும், சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27ஆம் தேதியான இன்று அவரது உயிர் பிரிந்தது.

டி20 உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணியுடன் சென்னை சேப்பாக்கத்தில் இருந்த ரிங்கு சிங், தந்தையின் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக அணியிலிருந்து விலகி தனது சொந்த ஊரான அலிகாரிற்குப் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பே தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமானதால் ரிங்கு சிங் அவசரமாக வீட்டிற்குச் சென்றுவிட்டு, பின்னர் மீண்டும் அணியுடன் இணைந்திருந்தார். நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றாலும், மாற்று வீரராக மைதானத்தில் அணியுடன் இருந்தார். இந்த நிலையில், இன்று தந்தை இறந்த செய்தி அவரை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய அணி தனது வாழ்வா சாவா ஆட்டத்தில் அடுத்ததாகக் கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. அரையிறுதிக்குச் செல்ல மிக முக்கியமான இந்தப் போட்டியில் ரிங்கு சிங் பங்கேற்பாரா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு அவர் அணிக்குத் திரும்புவாரா அல்லது தொடரிலிருந்து விலகுவாரா என்பது குறித்து பிசிசிஐ தரப்பில் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
28 வயதான ரிங்கு சிங் இந்தத் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 24 ரன்கள் எடுத்துள்ளார். முக்கியமான கட்டத்தில் தந்தையை இழந்து வாடும் ரிங்கு சிங்கிற்கு சக வீரர்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
