மும்பை : ரிங்கு சிங் வாழ்க்கையை புரட்டிப் போட்ட சம்பவம் 2023இல் தான் நடந்தது. ஐபிஎல் மட்டுமில்லாமல் இந்திய அணியில் இடம் பெற்றுத் தந்தது அந்த சம்பவம். அந்த ஒரு சம்பவத்தால் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமான வீரராக மாறினார். அந்த சம்பவம் 2023 ஐபிஎல் தொடரின் 13வது போட்டியில் நடந்தது.
2023 ஆம் ஆண்டு முடிவுக்கு வர உள்ள நிலையில் இந்த ஆண்டு கிரிக்கெட்டில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகளை திரும்பிப் பார்த்த போது அதில் முதல் இடத்தில் இருப்பது ரிங்கு சிங்கை சுற்றி நடந்த சம்பவங்கள் தான். சினிமாவில் மட்டுமே பார்க்கக் கூடிய மாதிரி சம்பவங்கள் 2023 ஆம் ஆண்டு ரிங்கு சிங் வாழ்வில் நடந்தது.

2023 ஐபிஎல் தொடரின் 13வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆடியது. அப்போது கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. முதல் பந்தை பெரிய பேட்டிங் திறமை இல்லாத உமேஷ் யாதவ் சந்தித்தார்.
அந்த நிலையில், ஒருவர் கூட கொல்கத்தா அணி வெற்றி பெறும் என் நினைத்து இருக்க மாட்டார்கள். எப்படியும் உமேஷ் யாதவ் ஒரு பந்தை சந்தித்து ஒரு ரன் ஓடினாலும், மறுபுறம் இருக்கும் ரிங்கு சிங் அடுத்த ஐந்து பந்துகளில் 28 ரன்கள் எடுக்க வேண்டும். இதெல்லாம் நடக்கிற கதையா? என அனைவரும் நினைத்த போது அதை நடத்திக் காட்டி மிரட்டினார் ரிங்கு சிங். கடைசி 5 பந்துகளில் ஐந்து சிக்ஸ் அடித்து தன் அணியை வெற்றி பெற வைத்தார்.
அந்தப் போட்டிக்கு பின் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். ஐந்தாம் வரிசை, ஆறாம் வரிசையில் பேட்டிங் இறங்கினாலும் 14 போட்டிகளில் 474 ரன்கள் குவித்து இருந்தார். அவரது சராசரி 59 ஆக இருந்தது.
அடுத்து நேரடியாக அவருக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைத்தது. இந்திய அணியிலும் ஒரிரு போட்டிகளை தவிர அனைத்து போட்டிகளிலும் அணிக்கு தேவையானதை செய்து நற்பெயரை சம்பாதித்தார். அடுத்து இந்திய ஒருநாள் அணியிலும் வாய்ப்பு பெற்று அறிமுகம் ஆனார். இதெல்லாம் ஒரு கனவு போல ஒரே ஆண்டில் நடந்து இருக்கிறது.
ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்து தன் கடின உழைப்பு மற்றும் திறமையால் கிரிக்கெட்டில் அவர் முன்னேறியதை இந்தியாவின் ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தர இளைஞரும் தான் முன்னேறியதை போல எண்ணி அவரை கொண்டாடி வருகிறார்கள். 2023 ஐபிஎல் தொடரின் அந்த 13வது போட்டி ரிங்கு சிங் மட்டுமின்றி எந்த ஒரு இந்திய கிரிக்கெட் ரசிகரும் கூட மறக்க முடியாத போட்டி.