மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் இளம் எம்பியான பிரியா சரோஜ் இருவருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. இந்த நிலையில் சமாஜ்வாதி எம்பி பிரியா சரோஜ் உடன் காதல் உருவானது எப்படி என்று நட்சத்திர வீரர் ரிங்கு சிங் பகிர்ந்துள்ளார்.
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் யாஷ் தயாள் பவுலிங்கில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை விளாசி ரிங்கு சிங் மறக்க முடியாத வரலாற்றை படைத்தார். இந்த சம்பவம் முதல் ரிங்கு சிங்கின் வாழ்க்கை மொத்தமாக மாறியது. அதன்பின் இந்திய டி20 அணியில் இடம்பிடித்த ரிங்கு சிங், தற்போது இந்திய டி20 அணியின் நிரந்தர வீரராக மாறி இருக்கிறார்.

அண்மையில் ரிங்கு சிங்கிற்கும், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த இளம் பெண் எம்பியான பிரியா சரோஜ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் நடப்பாண்டு நவம்பர் 18ஆம் தேதி நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சமாஜ்வாதி எம்பி பிரியா சரோஜ் உடன் காதல் உருவானது எப்படி என்பதை ரிங்கு சிங் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக ரிங்கு சிங் பேசுகையில், எங்களின் காதல் உருவானது 2022 கொரோனா காலக்கட்டத்தில் தான். அப்போது ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக மும்பையில் முகாமிட்டிருந்தேன். அப்போது இன்ஸ்டாகிராமில் என்னுடைய ரசிகர் பேஜ் ஒன்றில் பிரியாவின் புகைப்படம் பதிவிடப்பட்டு வாக்கு கோரப்பட்டது. பிரியா சரோஜின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரின் சகோதரி எடுத்து பதிவிட்டு வந்தார்.
அவர் என்னுடைய ரசிகரின் பேஜ் ஒன்றில் புகைப்படத்தை பதிவிடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த உடன் மிகவும் பிடித்துப் போய்விட்டது. உடனடியாக அவரின் புகைப்படத்தை லைக் செய்துவிட்டேன். மெசேஜ் அனுப்பலாமா என்று யோசித்த போது, அது சரியாக இருக்காது என்று நிறுத்திவிட்டேன். அதன்பின் சில நாட்களுக்கு பின் பிரியா சரோஜ் என்னுடைய இன்ஸ்டா புகைப்படங்களை லைக் செய்திருந்தார்.
அதன்பின் நானே நேரடியாக மெசேஜ் அனுப்பினேன். அப்படிதான் எல்லாமே தொடங்கியது. ஓரிரு வாரங்களில் நாங்கள் தொடர்ச்சியாக பேச தொடங்கிவிட்டோம். போட்டி தொடங்குவதற்கு முன், போட்டிக்கு பின் என்று பேசிக் கொண்டே இருந்தோம். அதன்பின் எனக்குள் காதல் ஏற்பட்டது. ஆனால் அவர் தேர்தலில் வென்ற பின், நாங்கள் பேசுவதே குறைந்துவிட்டது. பிரியா சரோஜ் அவரின் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
நாடாளுமன்றமும் தொடங்கிவிட்டது.. ஒரு அரசியல்வாதியாக அவர் களத்தில் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. பிரியா சரோஜின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்றாலே, அவரின் உழைப்பை புரிந்து கொள்ள முடியும். காலையில் வீட்டில் இருந்து சென்றால், இரவு நேரத்தில் தான் வருவார். அதனால் நாங்கள் எங்களின் விஷயங்களை இரவில் மட்டுமே பேசிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.