மும்பை: இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஓய்வறையில் ஜாலியான பாடல்களை கேட்டு உற்சாகமாக இருப்பார் என்று நட்சத்திர வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். சீனியர் வீரர்களுடன் ஜாலியாக சிரித்து பேசும் பழக்கம் கொண்ட கம்பீர், ஓய்வறையில் ஒரே வைப்பில் வைத்து கொள்வதில் கெட்டிக்காரர் என்றும் ரிங்கு சிங் கூறி இருக்கிறார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வழக்கமாக ஆவேசத்துடன் காணப்படுகிறார். ஒருமுறை நேர்காணல் ஒன்றில் நீங்கள் சிரிக்கவே மாட்டீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, ரசிகர்கள் பணம் கொடுத்து நேரில் வந்து கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது அணியின் வெற்றிக்காக தானே தவிர, என் சிரிப்பை பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல என்று பதில் அளித்தார்.

ஓய்வறையில் கவுதம் கம்பீர் எப்போதும் கோபத்துடனும், ஆவேசத்துடனும் காணப்படுவார். அப்படியே சிரித்தாலும், உதடுகளை கடந்து அந்த சிரிப்பு எங்கும் செல்லாது. இந்த நிலையில் கவுதம் கம்பீரின் ஜாலியான நிமிடங்கள் குறித்து இந்திய அணியின் ரிங்கு சிங் பேசி இருக்கிறார். ஆசியக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ள ரிங்கு சிங், திருமணம் நடக்க உள்ளதன் உற்சாகத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் ரிங்கு சிங் பேசுகையில், கேகேஆர் அணிக்காக ஆடிய போது கவுதம் கம்பீர் ஒவ்வொரு வீரருக்கும் ஆதரவாக இருப்பார். அனைவருக்கும் ஆதரவாக நிற்பார். ஒரு பேட்ஸ்மேன் களமிறங்குவதற்கு முன்பாக, களத்தில் உனக்கு என்ன தோன்றுகிறதோ, அதனை செய்துவிட்டு வா என்று உற்சாகம் அளிப்பார். ரசிகர்களுக்கு கம்பீர் ஆவேசமான முகம் மட்டுமே நினைவில் இருக்கும்.
எனக்கு தெரிந்த வரை கம்பீருக்கு வெற்றி பெற அதிகமாக விரும்புவார். ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் கடவுளிடம் வேண்டுவார். அதேபோல் கம்பீர் எப்போதும் ஆவேசமாக மட்டும் இருக்க மாட்டார். ஓய்வறையில் இருக்கும் போது அதிகளவிலான பாடல்களை கம்பீர் கேட்பார். ரமன்தீப் சிங் தான் எங்கள் அறையில் டிஜே. ஒரு ஜாலியான வைப்பில் கம்பீர் அனைவரையும் வைத்துக் கொள்வார்.
சீனியர் வீரர்களுடன் ஜாலியாக சிரித்துப் பேசி, சில ஜாக்குகளை கூட சொல்வார் என்று தெரிவித்துள்ளார். கேகேஆர் அணியின் ஆலோசகராக ஒரு ஆண்டு பணியாற்றிய கம்பீர், உடனடியாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அதன்பின்னரே இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு கம்பீர் கொண்டு வரப்பட்டார். தொடக்கத்தில் சில சறுக்கல் இருந்தாலும், தற்போது கம்பீர் இந்திய அணியை சிறப்பாக கையாண்டு வருவதாக பார்க்கப்படுகிறது.