லக்னோ : இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சுரேஷ் ரெய்னா என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் ரிங்கு சிங். ஐபிஎல் தொடர் மூலம் உச்சத்தை தொட்ட ரிங்கு சிங் தற்போது அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் முதல் முறையாக சேர்க்கப்பட்டிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் கே கே ஆர் அணிக்காக விளையாடிய ரிங்கு சிங், 50 லட்சம் ரூபாய் வரை ஊதியமாக பெற்று வந்தார். இந்த நிலையில் இந்த பணத்தை தனது குடும்பத்திற்காக பயன்படுத்தாமல் தமது ஊரில் உள்ள ஏழை மாணவர்களுக்கு ரிங்கு சிங் பயன்படுத்துகிறார்.

தனது நண்பருடன் இணைந்து 15 பேர் தங்கி பயிற்சியாளர் உடன் கிரிக்கெட் பயிற்சி பெறும் வகையில் ஒரு தங்கும் விடுதியை ரிங்கு சிங் கட்டி வருகிறார். இது குறித்து பேசிய அவர் இந்திய அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் ரன்கள் சேர்க்க வேண்டும். அதுதான் என்னுடைய பணி என நினைக்கின்றேன்.நான் எதையும் குறித்து யோசிப்பதில்லை.
நிகழ்காலத்தில் என்ன நடக்கிறதோ அதை தான் பார்ப்பேன். கடவுள் என்னைத் தொடர்ந்து ஆசிர்வதிப்பார் என நம்புகிறேன். உழைப்பது மட்டும்தான் நமது கையில் இருக்கிறது. மற்றவை எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார்.இது என்னுடைய குடும்பங்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. நான் என் தந்தையிடம் இனி நீங்கள் சிலிண்டர்களை தூக்கி செல்லும் வேலையை பார்க்க வேண்டாம் என கூறி விட்டேன்.
ஆனால் அவருடைய பணியை அவர் மிகவும் விரும்புகிறார். இதனால் அந்தப் பணியை நான் நிறுத்த மாட்டேன் என்றும் அவ்வாறு செய்தால் எனக்கு போர் அடித்து விடும் என்றும் தனது தந்தை கூறுவதாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாடியதன் மூலம் தன்னுடைய வாழ்க்கை தற்போது மாறிவிட்டது. கிரிக்கெட்டில் கூட நான் எப்போதுமே அதீத நம்பிக்கையில் இருக்க மாட்டேன் எப்போதுமே சிம்பிளாக கிரிக்கெட் விளையாட வேண்டும் என நினைக்கிறேன் என்றும் ரிங்கு சிங் கூறியுள்ளார். அயர்லாந்து கிரிக்கெட் தொடருக்கு முன் அபிஷேக் நாயரிடமும் பயிற்சி எடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.