ஆஸி.க்கு அதிருப்தி தந்த ஒலிம்பிக் கிராமம்.. ஆனால் இந்தியாவுக்கு பரம திருப்தி!
டெல்லி: ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய வீரர்களின் தங்கும் அறைகள் நன்றாக இருப்பதாக ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய குழுவின் தலைவர் ராகேஷ்குப்தா திருப்தி தெரிவித்துள்ளார்.
பிரேசிலிலுள்ள ரியோ டி ஜெனிரோவில் அடுத்தமாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியா சார்பில் இந்தப் போட்டிகளில் 120 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே இருப்பதால் இந்திய வீரர்கள் உட்பட விளையாட்டு வீரர்கள் ஒவ்வொரு குழுவாக பிரேசிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இந்த வீரர்கள் தங்குவதற்காக ஒலிம்பிக் கிராமத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நேரில் ஆய்வு...
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய குழுவின் தலைவர் ராகேஷ்குப்தா நேற்று ஒலிம்பிக் கிராமத்திற்கு நேரில் சென்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாச்சை சந்தித்தார். இந்திய வீரர்கள் தங்க இருக்கும் அறைகளையும் அப்போது அவர் பார்வையிட்டார்.

சைவ உணவுகள்...
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகேஷ் குப்தா, "ஒலிம்பிக் கிராமத்தில் நிறைய சைவ உணவுகள் வழங்கப்படுகிறது. வீரர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால், அடுத்த சில தினங்களில் கூடுதல் உணவு வகைகள் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

கடைசி கட்ட பணிகள்...
தங்கும் அறைகள் நன்றாக இருக்கிறது. ஆனாலும் கடைசி கட்ட சில பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஓரிரு தினங்களில் அப்பணிகள் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம்.

அருமை...
இந்திய வீரர்களின் குடியிருப்புக்கு அடுத்து பிரேசில் வீரர்களின் தங்குமிடம் வருகிறது. இங்கு செய்யப்பட்டுள்ள வசதி வாய்ப்புகள் அருமையாக உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அதிருப்தி..
சமீபத்தில் ஆஸ்திரேலிய குழு ஒலிம்பிக் கிராமத்தில் வசதிகள் சரியில்லை என்று கூறி அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications