டெஸ்டில் தோனிக்கு பின்
டெஸ்ட் அணியில் இருந்து தோனி 2014இல் ஓய்வு பெற்றார். அதன் பின் இந்திய டெஸ்ட் அணிக்கு விக்கெட் கீப்பராக சாஹா இருந்தார். அவருக்கு சமீபத்தில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. அந்த நேரத்தில் தினேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல் இருவரும் வாய்ப்பு பெற்றும், தங்களை நிரூபிக்கவில்லை.
ரன்கள் குவித்த ரிஷப்
அதையடுத்து ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியில் இடம் பெற்றார். அவர் 5 டெஸ்ட் போட்டிகளில் 1 சதம், 2 அரைசதம் அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரிஷப் பண்ட் ஆடினார். எனினும், இந்த தொடரில் அவர் பெரியளவில் ரன் குவிக்கவில்லை. விக்கெட் கீப்பிங்கும் செய்யவில்லை.
வாய்ப்பை வீணடித்த தினேஷ், பார்த்திவ்
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் விஜய் தாஹியா, ரிஷப் பண்ட்டை ஆதரித்து கருத்து கூறியுள்ளார். "இந்திய அணியில் தற்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஒருவரை அடையாளம் காண முயன்று வருகிறார்கள். பார்த்திவ் படேலுக்கு சில வாய்ப்புகள் கிடைத்தன. தினேஷ் கார்த்திக் பல முறை வாய்ப்பு பெற்றார். ஆனால், ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் தன் வாய்ப்பை தக்க வைத்தது போல வேறு யாரும் செய்யவில்லை. பண்ட் ஒரு "மேட்ச் வின்னர்"" என கூறினார் விஜய்.
தோனியின் இடத்தை நிரப்புவது கடினம்
மேலும் கூறுகையில், "தோனி ஒரு ஜாம்பவான். இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர். தோனியுடன், பண்ட் ஆடியது இந்திய கிரிக்கெட் அடுத்த நபரை தேடுகிறது என்பதை காட்டுகிறது. ரிஷப், தோனியின் இடத்தை நிரப்புவது கடினம். ஆனால், காலப்போக்கில் அவர் அதை செய்வார்" என ரிஷப் பண்ட்டை ஆதரித்து பேசினார் விஜய் தாஹியா.
இந்திய அணியில் என்ன நடக்கிறது?
இவர் கூறுவது தான் இந்திய கிரிக்கெட்டில் நடந்து வருகிறது. தோனி தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ரிஷப் பண்ட் விரைவில் நிரந்தர இடத்தை பிடித்து விடுவார் என எதிர்பார்க்கலாம். ஆனால், ரிஷப் டெஸ்ட் போல சதம், அரைசதம் என டி20யிலும் தொடர்ந்து அதிரடியாக ரன் குவிக்க வேண்டும். இது நடந்தால், உலகக்கோப்பை முடிந்த உடன் ரிஷப் எளிதாக ஒருநாள் போட்டி அணியிலும் நிரந்தர இடத்தை பிடித்து விடுவார்.