தோனிக்கு மாற்று வீரர்கள்
தோனிக்கு மாற்றாக அணியில் இருப்பவர்கள், தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட். ரிஷப் பண்ட் அதிரடி வீரர் என பெயர் பெற்றவர். தினேஷ் கார்த்திக் சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் செய்வார்.
இருவருக்கும் மறைமுக போட்டி
இவர்கள் இருவருக்கும் இடையே அணியில் இடம் பிடிப்பது யார் என்ற போட்டி மறைமுகமாக இருக்கக்கூடும். ஆனால், நேற்று களத்தில் இருவரும் ஒன்றாக பேட்டிங் செய்யும் போது, ஒருவருக்கொருவர் சளைக்காமல் அதிரடியாக ஆடினர்.
ரிஷப் - தினேஷ் சேர்ந்து ஆடினர்
நேற்றைய போட்டியில் இந்தியாவிற்கு 17 ஓவர்களில் 174 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி 11.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து இருந்தது. அப்போது ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர்.
பின்தங்கிய ரிஷப் பண்ட்
அப்போது ரிஷப் அதிரடியாக ஆடுவார். தினேஷ் கார்த்திக் அவருக்கு ஒத்துழைப்பு அளிப்பார் என்று தான் பலரும் நினைத்து இருந்தனர். ஆனால், தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடினார். ரிஷப் பண்ட்டால் குறைந்த பந்துகளில் எளிதாக பவுண்டரிகள் அடிக்க முடியவில்லை. ஆனால், அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் 12 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். அதே நேரத்தில் ரிஷப் பண்ட் 16 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இவர்கள் இருவரும் 3.5 ஓவர்களில் 51 ரன்கள் சேர்த்து அணியை ஓரளவு மீட்டனர். ஆனால், ரிஷப் பண்ட் தேவையற்ற ஷாட் ஆடி அவுட்டானார்.
அதிரடியாக ஆடி நிரூபித்த தினேஷ் கார்த்திக்
அதன் பின் இந்தியா கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. எனினும், இந்த போட்டியில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் இருவரில் யார் சிறந்தவர் என்பதை நேரடியாக கண்டுபிடிக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைத்த வாய்ப்பில் தன்னை நிரூபித்துள்ளார். ரிஷப் பண்ட் பொறுப்பில்லாமல் ஷாட் அடித்து ஆட்டமிழந்தார் என ரசிகர்கள் கூறி வருவதால் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார்.