சாதனை மேல் சாதனை படைத்த ரிஷப் பண்ட்… இவருக்குள்ள என்னமோ இருக்கு
லண்டன் : இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் நேற்று தன் முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார்.
இந்தியா, இங்கிலாந்து இடையே நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட், ராகுல் இணை அட்டகாசமாக ஆடினர்.
இந்த போட்டியில் இருவரும் சதம் அடித்து, இந்தியாவை மிக மோசமான தோல்வியில் இருந்து காப்பாற்றினர். இந்திய டெஸ்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளனர்.

முதல் ரன்னே சிக்ஸ் தான்
ரிஷப் பண்ட் தன் முதல் டெஸ்ட் போட்டியில், தன் முதல் டெஸ்ட் ரன்னை சிக்ஸ் அடித்து தான் எடுத்தார். அப்போதே பலராலும் பாராட்டப்பட்டார். அது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இவர் மீது பெரிய எதிர்பார்ப்பு வர காரணமாக அமைந்தது.

முதல் நூறும் சிக்ஸ் தான்
தன் முதல் டெஸ்ட் சதத்தை அடித்த ரிஷப் பண்ட், சிக்ஸ் அடித்தே சதத்தை எட்டினார். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் தன் முதல் ரன் மற்றும் முதல் சதம் இரண்டையும் சிக்ஸ் மூலம் அடைந்துள்ளார். இங்கிலாந்தில் தன் முதல் சதத்தை எடுக்கும் முதல் இந்திய விக்கெட்கீப்பர் என்ற சாதனையும் படைத்தார்.

வேறு யார் சிக்ஸ் அடித்தது?
இதற்கு முன் இந்தியா சார்பில் இது போல தன் முதல் சதத்தை சிக்சர் அடித்து எடுத்த வீரர்கள் கபில் தேவ், இர்பான் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தான். இவர்கள் பட்டியலில் நான்காவதாக இணைந்துள்ளார் ரிஷப் பண்ட்.

கூட்டணியிலும் சாதனை
ராகுல், பண்ட் இணைந்து நேற்று 204 ரன்கள் எடுத்தனர். ஒரு டெஸ்டின் நான்காவது இன்னிங்க்ஸில் இந்தியா சார்பில் 150 மற்றும் 200 ரன்களுக்கு மேல் கூட்டணி அமைத்து ரன் எடுப்பது இதுவே முதல் முறை. மேலும், உலக அளவில் நான்காவது இன்னிங்க்ஸில் 150 ரன்களுக்கு மேல் எடுக்கும் ஏழாவது இணையும் இவர்களே.


Click it and Unblock the Notifications